கறுப்பு பணம்-அத்வானிக்கு ப.சி. பதில்
டெல்லி: கறுப்பு பண விவகாரத்தில் மத்திய அரசு வேகமாகவும், விவேகமாகவும் செயல்பட்டு வருவதாக மத்திய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், பாஜக பிரதம வேட்பாளர் அத்வானியின் குற்றச்சாட்டுக்கு பதில் தந்துள்ளார்.
இந்திய பண முதலைகள் சுவீஸ் வங்கிகளில் கோடி கணக்கில் பணம் வைத்திருக்கின்றனர். அதன் மதிப்பு சுமார் ரூ 72 லட்சம் கோடி. இவ்விவகாரத்தில் காங்கிரஸ் அரசு நழுவிச் செல்கிறது என பாஜக பிரதம வேட்பாளர் அத்வானி கூறியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் மறுத்துள்ளார். இது குறித்து அவர் அத்வானிக்கு பதில் கடிதம் ஒன்ரு எழுதியுள்ளார். அதில்,
இந்த விஷயத்தில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அப்போது நிதியமைச்சராக இருந்தவர் என்ற வகையில் இந்த கடிதத்தை எழுதி உள்ளேன். இதில் உண்மைக்கு மாறாக எதுவும் இல்லை.
2008 பிப்ரவரி 26-ம் தேதி பிராங்க்பர்ட் டேட்லைனில் வெளியான செய்தியை அடுத்து ஜெர்மனியின் மத்திய வரி அலுவலகத்துக்கு நிதியமைச்சகத்திலிருந்து இது தொடர்பாக விவரம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. ஜெர்மன் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் பற்றி விவரம் கேட்கப்பட்டது.
இந்த விஷயத்தில் நிதியமைச்சகம் சிரத்தையுடன் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது. இந்த விஷயத்தில் வேகமாகவும், விவேகமாகவும் செயல்பட்டு வருகிறோம் என்றார் சிதம்பரம்.
இது குறித்து இந்திய வெளியுறவு துறை செயலர் சிவசங்கர மேனன் கூறுகையில், சுவிஸ் வங்கிகளில் இருக்கும் ரகசிய கணக்கு குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆனால், இவ்விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றார்.