போர் நிறுத்தம்: மீண்டும் புலிகள் கோரிக்கை-இலங்கை நிராகரிப்பு

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச தூதரக உறவுகளுக்கான பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வராஜா பத்மநாதன் இதுதொடர்பாக கோரிக்கை விடுத்து்ளார்.
தமிழ்நெட் இணையதளத்திற்கு பத்மநாதன் அளித்துள்ள பேட்டியில், விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்ய முன்வர வேண்டும் என சர்வதேச சமுதாயம், இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.
ஆயுதங்களை முதலில் கீழே போட வேண்டும் என்று இலங்கை அரசு கூறுவது சாத்தியமில்லாதது.
ராணுவ நடவடிக்கைகளின் காரணமாக விடுதலைப் புலிகள் சில இழப்புகளை சந்தித்துள்ளனர். ஆனால் இது ஒரு தற்காலிக பின்னடைவுதான்.
விடுதலைப் புலிகள் பலவீனமான நிலையில் இருப்பதாக கணிப்பது தவறானதாகும். விடுதலைப் புலிகள் பன்முகம் கொண்டவர்கள், மிகுந்த வீரம் உடையவர்கள். அவர்களைக் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது என்றார் பத்மநாதன்.
இலங்கை மீண்டும் நிராகரிப்பு ..
விடுதலைப் புலிகள் மீண்டும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியிருப்பதை இலங்கை அரசு மீண்டும் நிராகரித்துள்ளது.
இதுகுறித்து அரசு அதிகாரி ராஜீவா விஜதுங்கா கூறுகையில், விடுதலைப் புலிகளுடன் எந்தவிதமான ஒப்பந்தமும் செய்து கொள்ளும் திட்டம் அரசிடம் இல்லை.
அப்பாவி மக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக பிடித்து வைத்துள்ளனர். இதை பல்வேறு உலக நாடுகள், அமைப்புகள் கண்டித்துள்ளன என்றார்.
இதற்கிடையே, விடுதலைப் புலிகளின் கோரிக்கையை இலங்கை அதிபர் ராஜபக்சேவும் நிராகரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், விரைவில் போர் முடியும். இந்த சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் கோருவதைப் போல போர் நிறுத்தம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை.
சர்வதேச சமுதாயம் இதுதொடர்பாக கொடுக்கும் எந்தவித நெருக்கடிக்கும் நாங்கள் பணிய மாட்டோம். போர் முடியும் வரை அதை நிறுத்த மாட்டோம் என்றார் ராஜபக்சே.
மக்கள் வெளியேற மட்டுமே வாய்ப்பு தருவோம் - இலங்கை
இதற்கிடையே விடுதலைப் புலிகள் கோருவது போல போர் நிறுத்தம் செய்ய முடியாது. சண்டை நடந்து வரும் பகுதிகளிலிருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற சிறிது நேர சண்டை நிறுத்தத்திற்கு மட்டுமே வாய்ப்பு தருவோம் என இலங்கை விளக்கியுள்ளது.
இதுகுறித்து இலங்கை பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளர் கெகலிய ரம்புகவெல்லா செய்தியாளர்களிடம் கூறுகையில், விடுதலைப் புலிகளுடன் எக்காரணம் கொண்டும் போர் நிறுத்தம் செய்ய மாட்டோம்.
இருப்பினும் சண்டை நடந்து வரும் பகுதிகளிலிருந்து அப்பாவி பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற வசதியாக அவ்வப்போது தற்காலிக சண்டை நிறுத்தம் செய்ய வாய்ப்புண்டு.
இந்த தற்காலிக சண்டை நிறுத்தத்தை போர் நிறுத்தம் என சிலர் தவறாக கூறி வருகின்றனர்.
அப்பாவி மக்கள் விடுதலைப் புலிகளின் பகுதியிலிருந்து தப்பி வர வசதியாகவே இந்த தற்காலிக சண்டை நிறுத்தத்தை பயன்படுத்துகிறோம். எதிர்காலத்திலும் இது தொடரும் என்று அவர் விளக்கினார்.
ஒரு வாரத்தில் 1412 ராணுவத்தினர் பலி:
இதற்கிடையே முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய தடுப்புத் தாக்குதலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1412 ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தரப்பு கூறுகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் குறுகிய இடத்திற்குள் விடுதலைப் புலிகளை முடக்கி விட்டதாக இலங்கை அரசும், ராணுவமும் தொடர்ந்து கூறி வருகின்றன.
ஆனால் அந்த குறுகிய இடத்திற்குள் புக முடியாமல் ராணுவம் தடுமாறி வருகிறது. காரணம், விடுதலைப் புலிகள் நடத்தி வரும் உறுதியான, வலுவான தடு்ப்புத் தாக்குதலே.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு வட்டாரத்தில் உள்ள இரணைப்பாலை, ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளில், விடுதலைப் புலிகளின் தடுப்பு அரண்களை உடைத்து நுழைவதற்காக சிறிலங்கா படையினர் கடந்த ஏழு நாட்களாய் எடுத்த முன்னேற்ற முயற்சிகளை விடுதலைப் புலிகள் தடுத்துள்ளனர்.
இதில் ராணுவத்திற்கு பெரும் உயிரிழப்பும், சேதமும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகள் கடந்த 7 நாட்களாக தொடர்ந்து நடத்தி வரும் முறியடிப்புத் தாக்குதல்களில் இதுவரை 1,412 இலங்கைப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 6,123 படையினர் படுகாயமடைந்து உள்ளனர்.
விடுதலைப் புலிகளின் படையணிகளுக்கு எதிராக சிறிலங்கா படையினர் ஏவும் எறிகணைகள் மற்றும் வான்குண்டுகள் பல சிறிலங்கா படையினர் மத்தியிலேயே வீழ்ந்து வெடிப்பதாலும் படையினர் தரப்பில் கணிசமான அளவு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், களமுனையில் கடுமையான நெருக்கடிகளை இலங்கைப் படையினர் எதிர்கொண்டுள்ளனர் என்று விடுதலைப் புலிகள் ஆதரவு இணையதளம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications