பிரபல ரவுடி திருச்சி குணா அரசியல் பிரவேசம்
சென்னை: பிரபல ரவுடி கும்பல் தலைவர் திருச்சி குணா அரசியலில் புகுகிறார்.
திருச்சி குணாவைத் தெரியாத போலீஸ்காரர்களோ, ரவுடிகளோ திருச்சி மாவட்டத்தில் இருக்க முடியாது. அந்த அளவுக்கு தாதாவுக்கெல்லாம் தாதாவாக வலம் வருபவர் குணா.
அவரிடம் உள்ள ஆள் பலம், திருச்சி மாவட்டத்தில் வேறு எந்த தாதாவுக்கும் இல்லாததால், திருச்சி குணாவின் கையே இன்றளவும் அங்கு ஓங்கியுள்ளது.
இந்த நிலையில், திருச்சி குணா அரசியல் பிரவேசம் செய்கிறார். உறையூரில் வசித்து வரும் குணா, தனது ரவுடி வாழ்க்கை நரகமாக இருந்ததாக கூறுகிறார்.
தனது அரசியல் பிரவேசம் குறித்து குணா கூறுகையில்,
சிறு வயதில் இருந்தே சமூக சேவைகளில் எனக்கு ஆர்வம். எங்கேயாவது தப்பு நடந்தால் அதனை தட்டிக்கேட்பேன். சந்தர்ப்ப சூழ்நிலைகள் என்னை இப்படி மாற்றிவிட்டன.
இனிமேல் திருந்தி வாழ ஆசைப்படுகிறேன். பழங்குடியின மக்கள் மீது எனக்கு பாசம் அதிகம். இதற்காகத்தான் பழங்குடி மக்கள் கட்சியில் இணைந்துள்ளேன். இனி அவர்களுக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணிக்கப்போகிறேன். அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பாடுபடப்போகிறேன் என்கிறார்.
பழங்குடியின மக்கள் கட்சி சார்பில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு குணா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இக்கட்சியின் மாநில தலைவர் விஜயன், திருச்சி குணாவுக்கு அனுப்பியுள்ள நியமன கடிதத்தில் பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கும், மக்களுக்கும் தொண்டாற்றிட வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதில் விசேஷம் என்னவென்றால் திருச்சி போலீஸாரின் என்கவுன்டர் லிஸ்ட்டில் குணாவின் பெயரும் உள்ளதாம். இந்த நிலையில் அவர் அரசியலுக்கு வருகிறார்.
புல்லட்டிலிருந்து தப்பி பேலட் பக்கம் வந்துள்ள குணாவின் அரசியல் வாழ்க்கை எப்படி இருக்குமோ, மக்கள் கையில்தான் உள்ளது.












Click it and Unblock the Notifications