விஜயகாந்த் மீது தேர்தல் விதி மீறல் வழக்கு
சிவகங்கை: பிரசாரத்தின்போது தேர்தல் விதி முறையை மீறியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நேற்று சிவகங்கை மாவட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சுற்றுபயணம் செய்த போது, ஏராளமான இடங்களில், அவரை வரவேற்று டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டு இருந்தன.
அத்துடன் மின்கம்பங்களில் கொடி தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன என்றும், விஜயகாந்துடன் 10-க்கும் மேற்பட்ட கார்கள் பின்தொடர்ந்து சென்றன என்றும் புகார் செய்யப்பட்டது.
மேலும், மானாமதுரை புதிய பஸ்நிலையத்தில் விஜயகாந்த் முன்அனுமதியின்றி, போக்குவரத்துக்கு இடையூறாக பிரசாரம் செய்தார் எனவும் கிராம நிர்வாக அதிகாரி பழனிச்சாமி போலீஸில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறியதாக விஜயகாந்த் உள்பட 100 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதே போல் எம்.கரிசல்குளத்தில் அனுமதியின்றி டிஜிட்டல் போர்டு வைத்ததாக தே.மு.தி.கவை சேர்ந்த பூமிநாதன், ஆறுமுகம், அர்ஜுனன் ஆகியோர் மீது திருப்பாச்சேத்தி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் கூடுதல் வாகனத்தில் சென்றதாக ஒரு வழக்கும், டிஜிட்டல் போர்டு வைத்ததாக மற்றொரு வழக்கும் விஜயகாந்த் மற்றும் 50 பேர் மீது திருப்பாச்சேத்தி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேட்பாளர் மீது வழக்கு
ராமநாதபுரம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சிங்கை ஜின்னாவை ஆதரித்து விஜயகாந்த் நேற்று முன் தினம் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்தார்.
அப்போது கீழக்கரையில் நீண்ட தூரத்துக்கு வாகனங்களில் தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாக சென்றதாக கிராம நிர்வாக அதிகாரி சேக்தாவூது வேட்பாளர் சிங்கை ஜின்னா மீது கீழக்கரை போலீசில் புகார் செய்தார். அதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications