சஞ்சய் தத்தை மிரட்டினாரா சட்ட அமைச்சர் பரத்வாஜ்?
டெல்லி: சமாஜவாதி கட்சியில் சேர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என காங்கிரசை சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவரின் உதவியாளர் தன்னை மிரட்டியதாக நடிகர் சஞ்சய் தத் புகார் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகரும், மறைந்த காங்கிரஸ் அமைச்சமருமான சுனில் தத்தின் மகன் சஞ்சய் தத். மும்பை குண்டு வெடிப்பு வழக்கில், ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இவர் தனது தந்தை மற்றும் சகோதரி பிரியா தத் வழியில் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் சமாஜ்வாடியில் சேர்ந்தார்.
இதையடுத்து அவர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னெளவில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால், கடந்த மார்ச் 30ம் தேதி உச்சநீதிமன்றம் தேர்தலில் போட்டியிட இவருக்கு தடை விதித்தது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சஞ்சய் தத் கூறுகையில்,
நான் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என மத்திய அமைச்சர் ஒருவரின் உதவியாளர் என்னை மிரட்டினார். அதை டேப் செய்து வைத்துள்ளேன்.
மிரட்டிய அமைச்சரின் பெயரை நான் தற்போது வெளியிட விரும்பவில்லை. நேரம் வரும்போது மேலும் விவரங்களை கூறுவேன். மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் எனக்கு கிடைத்த ஜாமீனை ரத்து செய்து விடுவோம் என்றும் மிரட்டினார்கள்.
சமாஜ்வாடி கட்சியில் இருப்பதை யாராலும் தடுக்க முடியாது. உயிர் பிரியும் வரை சமாஜ் வாடி கட்சியில் தான் இருப்பேன்.
தேர்தலில் போட்டியிடதான் எனக்கு தடையே தவிர, பிரசாரம் செய்வதற்கு அல்ல. இன்னும் 2 நாட்களில் லக்னெள செல்ல இருக்கிறேன். தேர்தல் முடியும் வரை அங்கு பிரசாரத்தில் ஈடுபடுவேன்.
எனது தந்தை சுனில்தத்தின் மறைவுக்கு காங்கிரஸ்தான் காரணம். காங்கிரஸ் தன்னை அவமானப்படுத்தியதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. அந்த வருத்தத்தில்தான் அவர் மரணமடைந்தார் என்று கூறியுள்ளார் சஞ்சய் தத்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது தந்தையை அவமானப்படுத்தியவர் சஞ்சய் நிருபம் (முன்னாள் சிவசேனா எம்.பி. - இப்போது காங்கிரஸில் இருக்கிறார்). அவருடன் கை கோர்த்து நிற்கிறது காங்கிரஸ். இதை விட சோகமானது எதுவும் இல்லை.
எனது தந்தை மத்திய அமைச்சராக இருந்தபோது கூட அவரை காங்கிரஸ் மதிக்கவில்லை. காங்கிரஸால்தான் எனது தந்தை மரணமடைந்தார்.
சஞ்சய் நிருபத்தின் அவமானத்தால் எனது தந்தை மிகவும் வருத்தமடைந்தார். கட்சியிலிருந்து விலகக் கூட அவர் முடிவு செய்தார். ராஜினாமா கடிதத்தையும் கூட அவர் கட்சிக்கு அனுப்பி வைத்தார்.
எனது சகோதரி தற்போது காங்கிரஸில் எம்.பியாக உள்ளார். அவரது இடத்தில் நான் இருந்திருந்தால் எனது பதவியை தூக்கி எறிந்திருப்பேன்.
சஞ்சய் நிருபத்திற்கு காங்கிரஸ் எந்த அளவுக்கு ஆதரவு தருகிறது என்பதை அவரும் உணர்ந்திருப்பார் என்றார் சஞ்சய் தத்.
பேட்டியின் போது அவருடன் இருந்த சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங் கூறுகையில்,
கொலை வழக்கில் சிக்கி ஜெயில் தண்டனை பெற்ற நவ்ஜோத் சித்துக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், சஞ்சய் தத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது.
சஞ்சய் தத்துக்கு அனுமதி இல்லை என்றால், சித்துவும் தேர்தலில் போட்டியிட கூடாது என்றார்.
தத்தை மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ் தான் மிரட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை பரத்வாஜ் மறுத்துள்ளார்.
சமாஜ்வாடி பொ.செ. ஆனார் சஞ்சய்தத்!
இதற்கிடையே சஞ்சய் தத், சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சிக்காக தீவிர பிரசாரத்தில் அவர் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.