பாஜக: ராமநாதபுரத்தில் திருநாவுக்கரசர் போட்டி
அறந்தாங்கி: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக தேசியச் செயலாளரும், ராஜ்யசபா எம்பியுமான திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார். இதையடுத்து ராமநாதபுரம் பகுதியிலேயே முகாமிட்டு கூப்பிட்டாலும் கூப்பிடாவிட்டாலும் காது குத்து, பெயர் வைத்தல், கல்யாணம், கருமாதி என அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
தமிழக அரசியல் தலைவர்களில் அனைவராலும் விரும்பப்படும் நபர் திருநாவுக்கரசர். நாகரீகமான அரசியல் நடத்தும் அவர் பாஜகவில் இருந்தாலும் அனைத்து மதத்தினரி்ன் அன்பைப் பெற்றவர்.
இந் நிலையில் ஆவுடையார்கோவிலில் பாஜக செயல் வீரர்கள் கூட்டத்தைக் கூட்டிய அவர் பேசுகையில்,
ராமநாதபுரம் தொகுதியில் நான் போட்டியிட உள்ளதற்குக் காரணம், நான் முன்பு போட்டியிட்டு வென்ற அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதி தற்போது ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சேர்க்கப்பட்டது தான்.
எனவே தாய்வீடாகிய ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறேன்.
கட்சி, ஜாதி வித்தியாசம் இல்லாமல் பொதுமக்கள் எனக்கு வாக்களிப்பார்கள். எம்ஜிஆரால் வளர்க்கப்பட்டவன் நான். எனக்கு மதரீதியாக, ஜாதி ரீதியாக பாகுபாடு காட்டத் தெரியாது. ஆகவே, முஸ்லிம் மக்கள் முதல் அனைத்து மதத்தினரும் என்னை ஆதரிப்பார்கள்.
தேசிய அளவில் பாஜக தற்போது அதிக மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. அடுத்து அத்வானிதான் பிரதமராகப் போகிறார் என்றார் திருநாவுக்கரசர்.