ஏப்ரல் 17-19 அஷ்டமி, நவமி-மனு தாக்கல் செய்ய வேட்பாள்கள் தயக்கம்
சென்னை: தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் தொடங்கும் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் அஷ்டமியும், 19ம் தேதி நவமியும் வருவதால், அந்த மூன்று நாட்களும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வதைத் தவிர்ப்பார்கள் எனத் தெரிகிறது.
நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து, நேரம் பார்த்து எதையும் செய்யும் பழக்கம் தமிழக மக்களிடம் நிறையவே உண்டு. குறிப்பாக அரசியல் கட்சியினர், திரையுலகினர் மத்தியில் இதற்கெல்லாம் ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான மனு தாக்கல் 17ம் தேதி தொடங்குகிறது. ஆனால் அன்றைய தினமும், அடுத்த நாளும், அஷ்டமி வருகிறது. 19ம் தேதி நவமி வருகிறது.
இதனால் இந்த மூன்று நாட்களும் சாஸ்திர, சம்பிரதாயம் பார்க்கும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வது நடைபெறாது என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் இந்த மூன்று நாட்களும் கண்டிப்பாக மனுத்தாக்கல் செய்ய மாட்டார்கள் என நம்பப்படுகிறது.
தமிழகத்தில் 17ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.