தமிழகத்தில் மனு தாக்கல் துவக்கம்-சுயேச்சைகளே தாக்கல்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 86 தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கையை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று வெளியிட்டார். இதையடுத்து இங்கு வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.
இன்று அஷ்டமி தினம் என்பதால் எந்த முக்கிய கட்சியின் வேட்பாளரும் மனு தாக்கல் செய்யவில்லை. சில சுயேச்சைகள் மட்டுமே மனு தாக்கல் செய்தனர்.
தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், பஞ்சாப், உத்தரகாந்த், ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் சண்டிகர் ஆகிய மாநிலங்களில் உள்ள 86 தொகுதிகளுக்கு இறுதிக் கட்டமாக மே 13ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான தேர்தல் அறிவிக்கையை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று வெளியிட்டார். இதையடுத்து 11 மணி முதல் இங்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
தமிழகத்தில் 39, உ.பியில் 14, மேற்கு வங்கத்தில் 11, பஞ்சாபில் 4, உத்தரகாந்த்தின் 5, இமாச்சலப் பிரதேசத்தில் 4, ஜம்மு காஷ்மீரில் 2, சண்டிகர், புதுச்சேரியில் தலா ஒரு தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி வருகிற 24ம் தேதி வரை நடைபெறும்.
25ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 27ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ள அவகாசம் தரப்படும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
தினசரி முற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம்.
ஐந்தாவது மற்றும் இறுதிக் கட்ட தேர்தலை சந்திக்கும் சில முக்கியத் தலைவர்கள் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, மு.க.அழகிரி, வருண் காந்தி, அசாருதீன், ஜெயப்பிரதா.
மே 13ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும்.
மே 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
சுயேச்சைகள் மனு தாக்கல்...
முதல் நாளான இன்று அஷ்டமி என்பதால் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை.
திருநெல்வேலி தொகுதிக்கு சங்கரபாண்டியன் என்ற சுயேச்சை மனு தாக்கல் செய்தார். இவர் ஒருவர் மட்டுமே இன்று மனுத்தாக்கல் செய்தவர் ஆவார்.
மதுரையில், சமாஜ்வாடிக் கட்சியின் வேட்பாளர் ராஜ்குமார் மனு தாக்கல் செய்தார்.
தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில் கனகராஜா என்ற சுயேச்சை மனுத் தாக்கல் செய்தார்.
தர்மபுரி தொகுதிக்கு இன்று மூன்று பேர் மனு தாக்கல் செய்தனர். அவர்களில் ஒருவர் பத்மராஜன். இவர் தமிழகத்தில் எந்தத் தேர்தல் நடந்தாலும் அதில் போட்டியிடுவார். கின்னஸ் சாதனைக்காக இவ்வாறு செய்து வருகிறார்.
தற்போது 101வது முறையாக தர்மபுரியில் மனு தாக்கல் செய்துள்ளார். இன்னொருவர் உழைப்பாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் அண்ணாதுரை. மூன்றாமவர் மணி.
இவர் முன்னாள் ராணுவ வீரர். மணிக்கு இரு கண்களும், இரு கால்களும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.