காங்கிரஸை இழிவுப்படுத்தியதாக நெடுமாறன் மீது புகார்
சேலம்: இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் சேலத்தில் நடந்து பொது கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் மக்கள் உரிமை கூட்டமைப்பு என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இலங்கை தமிழர்களை காக்க தவறிய திமுக, காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் சேலம் அம்மாபேட்டையில் மக்கள் உரிமை கூட்டமைப்பின் சார்பில் பொது கூட்டம் நடந்தது. அதில் நெடுமாறன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது தமிழ் தேச பொதுவுடமை கட்சியை சேர்ந்த சிலர் இலங்கையில் தமிழர்கள் படும் அவலநிலையில் விளக்கும் வகையில் தூண்டு பிரசுரங்களை கூட்டத்தினர் இடையே வினியோகித்தனர்.
இதை கேள்விப்பட்ட காங்கிரஸ், திமுக கூட்டணியினர் வந்து அங்கு கடும் வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் சாலை மறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது அம்மாப்போட்டை காங்கிரஸ் நிர்வாகி சுரேஷ் என்பவர் நெடுமாறன் தங்கள் கட்சி தலைவர்களை பற்றி அவதூறாக பேசியதாக புகார் கொடுத்தார்.
மேலும் அவர் பேசியதை தாங்கள் வீடியோ செய்து வைத்திருப்பதாகவும், அதில் அவர் பேசியது அனைத்தும் தெளிவாக இருப்பதாகவும் கூறினர். இதையடுத்து போலீசார் அந்த வீடியோவை ஆய்வு செய்து வருகின்றனர்.