5000 பீரங்கிக் குண்டுகளை வீசி தமிழர்கள் மீது கோரத் தாக்குதல்
முல்லைத்தீவு: மக்கள் பாதுகாப்பு வளையப் பகுதியில், பல மணி நேரத்திற்கு பீரங்கிகளால் தாக்கியுள்ளது இலங்கைப் படை. 5000 பீரங்கிக் குண்டுகளை வீசித் தாக்கியதில் நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். 1,374-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால், சாளம்பன், ஒற்றைப்பனையடி மற்றும் ஐ.பி.சி வீதி ஆகிய பகுதிகள் மீது இலங்கைப் படையினர் திங்கள்கிழமை மாலை முதல் நேற்று பிற்பகல் வரை சரமாரியாக ஆர்ட்டில்லரி தாக்குதல், பல குழல் வெடிகணைகள், மார்ட்டர் மற்றும் கனர துப்பாக்கிச் சூட்டை நடத்தினர்.
மேலும் விமானப்படை விமானமும், பிற்பகலில் கொத்து குண்டைப் போட்டுத் தாக்கியது.
இந்த கடும் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். எத்தனை பேர் இறந்தார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை. 1,374-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் இயங்கி வந்த தற்காலிக மருத்துவமனையில் குண்டு வீசப்பட்டதில், 18 நோயாளிகள் இறந்தனர்.
சரமாரித் தாக்குதலால் அப்பகுதிகள் அனைத்தும் சுடுகாடு போல காணப்படுகிறது.
கனரக ஆயுதங்களை வைத்து தாக்க மாட்டோம் என இலங்கை அரசு கூறியும் கூட அப்பாவிகளின் உயிரிழப்புகளுக்கு முடிவு ஏற்படவில்லை என்பது தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.