பாரதிராஜா-நெடுமாறனை கைது செய்யுங்கள்-'கராத்தே'
சென்னை: சோனியாவுக்கு எதிராக கறுப்பு கொடி காட்டப் போவதாக தெரிவித்திருக்கும் இயக்குனர் பாரதிராஜா, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நெடுமாறன் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என முன்னாள் சென்னை மேயரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான கராத்தே தியாகராஜன் கோரியுள்ளார்.
அவர் கூறுகையில், இந்தியா, சோனியா, இந்திரா ஆகியோரை இழிவுப்படுத்தும் வகையில் பெரியார் தி.கவினர் சிடி வெளியிட்டுள்ளனர். இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளோம். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த சி.டி தயாரிப்பின் பின்னணியி்ல் ஜெயலலிதா, வைகோ, ராமதாஸ் ஆகியோர் உள்ளனர். தோல்வி பயம் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி வெற்றி காண அவர்கள் முயற்சிக்கின்றனர்.
இலங்கை பிரச்சினைக்கு காங்கிரசாலும், சோனியாவாலும் தான் தீர்வு காண முடியும். சோனியாவுக்கு எதிராக கறுப்பு கொடி காட்ட திட்டமிட்டுள்ள பாரதிராஜா, நெடுமாறன் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்றார்.
காங்கிரஸ் வக்கீல்கள் எதிர் பிரசாரம்...
இதற்கிடையே பாரதிராஜா தலைமையிலான திரையுலக தமிழீழ ஆதரவு அமைப்புக்கு எதிராக பிரசாரம் செய்ய போவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சட்டபிரிவு அறிவித்துள்ளது.
அதன் பொதுச் செயலாளர் குருசாமி கூறுகையில்,
ஈழத் தமிழர்களுக்கு அதிக நன்மைகள் செய்தது காங்கிரஸ் கட்சி தான். விடுதலைப் புலிகளுக்கு ஒரு அங்கீகாரம் வாங்கி கொடுத்தது ராஜீவ் காந்தி தான். பிரபாகரனை முதல்வராக்கும் ஒப்பந்தத்தை ராஜீவ் காந்தி போட்டு கொடுத்தார். அதை பிரபாகரன் ஏற்று இருந்தால், இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.
பிரபாகரன் சர்வாதிகாரியாக இருப்பதால் தான் இந்த நிலைமை. விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத அமைப்பை ஆதரித்து பேசும் எண்ணம் காங்கிரசுக்கு கிடையாது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசுவது என்பது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிப்பது போன்றதாகும்.
தற்போது இயக்குனர் பாரதிராஜா தலைமையிலான குழுவினர் புலிகள் இயக்கத்தை ஆதரித்தும், காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என்று பிரசாரம் செய்ய இயக்குனர் பாரதிராஜாவுக்கு உரிமை கிடையாது. இது தேர்தல் விதிமுறை மீறலும் ஆகும். ஆனால் தேர்தல் கமிஷன் மெளனம் சாதிக்கிறது.
எனவே, இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு உத்தரவிட கோரி, உச்ச நீதிமன்றத்துக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்போகிறோம். அதன் நகலை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி, நடவடிக்கை எடுக்குமாறு கேட்போம்.
டைரக்டர் பாரதிராஜாவின் பிரசாரத்துக்கு தமிழக அரசும், தேர்தல் கமிஷனும் தடை விதிக்க வேண்டும். அப்படி அவர்களின் பிரசாரத்துக்கு தடை விதிக்கவில்லை என்றால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வக்கீல்கள் அணி சார்பில், 50 வாகனங்களில் புறப்பட்டு காங்கிரஸ் கட்சி ஈழத் தமிழர்களுக்காக செய்து இருப்பதை பட்டியலிட்டு மாற்று பிரசாரம் செய்வோம்.
பாரதிராஜா குழுவினர் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ள அதே நேரத்தில், அதே இடத்தில் எங்களது பிரசாரத்தையும் நடத்துவோம். இதற்கு அனுமதி கொடுக்கவில்லையென்றாலும் எங்கள் பிரசாரம் நடைபெறும் என்றார்.