For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நேரில் வந்து பாருங்கள்-பான் கி மூனுக்கு ராஜபக்சே அழைப்பு!

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் தற்போது நிலவி வரும் நிலைமையை நேரில் வந்து பார்க்குமாறு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனுக்கு அதிபர் ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருவது குறித்து சர்வதேச அளவில் இலங்கை அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. போரை நிறுத்துமாறு பல்வேறு உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஐ.நாவும் மீண்டும் மீண்டும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வருகிறது. ஆனால் இலங்கை அரசு இவை எதையுமே கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில் இலங்கையின் வட பகுதிக்கு வாருங்கள், அங்கு உள்ள நிலைமையை நீங்களே நேரில் சென்று தெரிந்து கொள்ளுங்கள் என்று ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூனிடம் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிபர் மாளிகை இன்று வெளியிட்ட அறிக்கையில், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனை இலங்கை வருமாறு அதிபர் ராஜபக்சே அழைத்துள்ளார். இடம் பெயர்ந்து வந்த மக்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளையும், அவர்களுக்காக செய்யப்பட்டுள்ள நிவாரணப் பணிகளையும் நேரில் பார்த்து அறிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும் என அதிபர், பான் கி மூனிடம் தெரிவித்துள்ளார்.

நேற்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், அதிபரைத் தொடர்பு கொண்டு போனில் பேசினார். அப்போதுதான் இந்த அழைப்பை விடுத்தார் ராஜபக்சே.

மேலும், தமிழ் மக்கள் இன்னும் விடுதலைப் புலிகள் வசம் சிக்கி மீளாத நிலையில் இருப்பதையும், அவர்களை மீட்க படையினர் மேற்கொண்டு வரும் முயற்சிகளையும், மீட்கப்பட்ட மக்களை இலங்கை அரசு எப்படி நடத்தி வருகிறது என்பதையும் நேரில் தெரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும் என்பதையும் பான் கி மூனிடம் தெரிவித்தார் ராஜபக்சே.

இலங்கை அரசுக்கும், ஐ.நா மற்றும் அதன் நிவாரண அமைப்புகளுக்கும் இடையே, இந்த வருகை மூலம் நல்ல புரிந்து கொள்ளுதல் ஏற்படும் என்றும் ராஜபக்சே தெரிவித்தார்.

அதிபரின் அழைப்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் உத்தரவாதமாக பதில் ஏதும் தரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக போர் நிறுத்தம் - மீண்டும் மூன் வலியுறுத்தல்

முன்னதாக நேற்று ராஜபக்சேவுக்கு போன் செய்த பான் கி மூன், உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என உறுதிபட வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் மூன் பேசுகையில், கனரக ஆயுதங்களை பயன்புத்துவதை இலங்கைப் படைகள் உடனடியாக நிறுத்த வேண்டும். இதனால் அப்பாவி உயிர்கள் தேவையில்லாமல் பலியாகி வருகின்றன.

போரை நிறுத்தினால்தான் போர்ப் பகுதியில் சிகிச்சைக்கு வலியின்றி தவிக்கும் அப்பாவி மக்களைக் காக்க முடியும்.

போர்ப் பகுதியிலிருந்து அப்பாவி மக்களை வெளியேற்றுவதற்காக சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதை நான் ராஜபக்சேவிடம் வலியுறுத்தினேன்.

நான் திரும்பவும் சொல்கிறேன், மக்களைப் பாதுகாப்பதும், சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மதிப்பதுமே முக்கியமானது. அதற்குத்தான் ஐ.நா. முன்னுரிமை கொடுக்கும். இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகளை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன. அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களையும் அனைவரும் உற்று கவனித்து வருகின்றனர்.

விடுதலைப் புலிகள் தங்கம் வசம் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை விடுவிக்க வேண்டும்.

மொத்தத்தில் இரு தரப்புமே உடனடியாக சண்டையை விட்டு விட்டு பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றார் பான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X