நிதிஷை விமர்சித்த மொய்லி பதவி நீக்கம்-காங். அதிரடி
இதன்மூலம் நிதிஷ்குமாருக்கு காங்கிரஸ் வலை வீசுவது மீ்ண்டும் உறுதியாகியுள்ளது.
நிதிஷ்குமார், ஜெயலலிதா ஆகியோரைப் பாராட்டிப் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இந்தக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும் தனது கட்சிக்கு பிரச்சனை ஏதுமில்லை என்றார்.
நிதிஷ்குமார் பிகாரில் மிகச் சிறந்த ஆட்சி நடத்துவதாகவும், ஆந்திராவில் தெலுங்கு தேசத் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் முன்பு சிறந்த ஆட்சியை வழங்கியதாகவும் பாராட்டினார்.
நிதிஷை காங்கிரஸ் பாராட்டியதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ். அதே போல ஜெயலலிதாவுடன் கூட்டணி என்று ராகுலும் மூத்த காங்கிரஸ் தலைவர்களும் பேசியது திமுகவுக்கும் கடும் எரிச்சலைத் தந்துள்ளது.
இதையடுத்து திமுகவுக்கு 'மஸ்கா' போடும் வகையில் குலாம் நபி ஆசாத், மாநில காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி அளித்தனர். மேலும் பிரதமரும் இன்று நேரில் வந்து முதல்வரை சந்திக்கிறார். அதே போல முதல்வருடன் கூட்டாக நடக்கயிருந்த பிரச்சாரக் கூட்டததை ரத்து செய்த காங்கிரஸ் தலைவர் சோனியாவும் நாளை சென்னை வந்து கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இந் நிலையில் லாலுவையும் சமாதானப்படுத்தும் வகையில் வீரப்ப மொய்லி பேட்டி தந்தார். அவர் கூறுகையில், நாங்கள் நிதிஷ்குமாரை ஹீரோ ஆக்க மாட்டோம். பாஜகவுடன் அவர் கூட்டணி சேர்ந்தது, இப்போதும் கூட்டணியைத் தொடர்வது ஆகியவை அவரது மதசார்பின்மை குறித்த கேள்விகளை எழுப்புகிறது.
பிகாரில் பாஜகவுடன் அவர் கூட்டணி ஆட்சி அமைத்தது அவரது மதசார்பின்மையில் விழுந்த கறை என்றார்.
மொய்லியின் இந்தப் பேச்சு நிதிஷை வளைக்க நினைக்கும் சோனியா, ராகுலுக்கு எரிச்சல் தந்துள்ளது. இதையடுத்து மொய்லியை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் பிரிவின் தலைவர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளனர்.
அவருக்குப் பதிலாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்தன் திரிவேதி அந்தப் பொறுப்பை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல நேற்று காலை பிரதமரின் அமைச்சரவைக் கூட்டத்தை புறக்கணித்த லாலுவையும் பாஸ்வானையும் கடுமையாகத் தாக்கிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் மாலையில் இந்த இருவரையும் பாராட்டிப் பேசினர்.
தேர்தலுக்குப் பின் என்ன மாதிரியான சூழ்நிலை ஏற்படும் என்று தெரியாததால் மாநில அளவில் எதிரெதிராக உள்ள பிராந்தியக் கட்சிகளுடனும் நல்லுறவைப் பேண ஆரம்பித்துள்ளது காங்கிரஸ்.
அந்த வகையில் தான் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு காலாக திமுக-அதிமுகவையும், நிதிஷ்- லாலுவையும் ஒரே நேரத்தில் பாராட்டிக் கொண்டுள்ளது.
நிதிஷுடன் இடதுசாரிகளும் வலை:
இதற்கிடையே பிகாரில் அதிக இடங்களில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படும் நிதி்ஷ்குமாருக்கு இடதுசாரிகளும் வலை வீசி வருகின்றனர்.
இது குறித்து மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கொல்கத்தாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசுகையில்,
பிகார் முதல்வர் நிதிஷ்குமார், பாஜகவுடனோ அல்லது காங்கிசுடனோ கூட்டணி அமைக்க மாட்டோம் என்று கூறியுள்ளார். எனவே தேர்தலுக்குப் பிறகு எங்கள் கூட்டணியில்தான் அவர் இருப்பார்.
தேர்தலுக்குப் பிறகு மூன்றாவது அணியில் மேலும் சில கட்சிகள் இணையும். இடதுசாரிகளை நம்பியுள்ள காங்கிரஸால் தனித்து ஆட்சி அமைக்க முடியாது. கடந்த 2004ல் பாஜக அதிகாரத்துக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்தோம். ஆனால் தற்போது எங்களுக்கு வரலாற்று முக்கியத்துவமான வாய்ப்பு கிட்டியுள்ளது என்றார்.