ஈழத் தமிழர்களுக்கு சிகிச்சை அளிக்க வவுனியாவில் மருத்துவமனை - பிரதமர்
சென்னை: போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வவுனியாவில் இந்தியாவின் சார்பில் கள மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
நேற்று சென்னை வந்த மன்மோகன் சிங் செய்தியாளர்களிடம் பேசினார். அதற்கு முன்னதாக மன்மோகன் சிங் வெளியிட்ட அறிக்கை ஒன்று செய்தியாளர்களிடம் வழங்கப்பட்டது.
அதில்,
இந்திய அரசு ஏற்கனவே 1 லட்சத்து 20 ஆயிரம் நிவாரண பொட்டலங்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளது. விரைவில் மீண்டும் ஒரு 50 ஆயிரம் நிவாரண பொட்டலங்களை அனுப்ப இருக்கிறது. மேலும் 5 ஆயிரம் குடும்பங்கள் தங்குவதற்கு தேவையான டென்ட்களை அனுப்ப இருக்கிறோம்.
இலங்கைக்கு கண்ணி வெடி குழு...
இலங்கைக்கு கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தும் குழுவினரும் அனுப்பப்படுவார்கள். இது தவிர மருந்து பொருட்களும் அனுப்பி வைக்கப்படும்.
விடுதலை புலிகள் தலைவர் பிராபகரன் ஒரு குற்றவாளி, அவரை இந்தியா தேடி வருகிறது. ஆனால் தற்போது அங்கு போர் பகுதியில் சிக்கி இருக்கும் மக்களை முதலில் வெளியில் பத்திரமாக கொண்டு வருவது தான் முக்கியம் என கருதுகிறோம்.
தமிழகத்தில் இரண்டு கூட்டணி கட்சிகளில் இருந்தும் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேச்சு எழுந்து வருகிறது. ஒரு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயக நாட்டில் அவர்களுக்கு பேசுவதற்கு உரிமை இருக்கிறது. ஆனால், அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. அதை மீறிவிடக் கூடாது.
தமிழ்நாடு ஒரு ஞானம் பெற்ற மாநிலம். அவர்கள் மற்றொரு நாட்டின் இறையாண்மை மீது தலையிடுவதில் உள்ள சிக்கல்களை புரிந்து கொள்வார்கள். தமிழ மக்கள் எங்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் உணர்ந்து கொள்வார்கள்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் உலகம் முழுவதும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. உலகம் முழுவதும் விலைவாசி உயர்ந்தது. இருந்தாலும், இந்திய விவசாயிகளின் பொருட்களை கூடுதல் கொள்முதல் விலையில் வாங்கினோம்.
விவசாயிகளிடம் அதிக கொள்முதல் விலையில் பணம் வாங்கியதால் அதற்கு ஈடுகட்டும் விதமாக விலைவாசி இந்தியாவிலும் உயர்ந்துள்ளது. என்றாலும் பணவீக்கம் விகிதத்தை 1 சதவீதத்துக்கு குறைவாக கட்டுபடுத்தி உள்ளோம். இந்த ஆண்டு விளைச்சல் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், விலைவாசி விரைவில் குறையும் என்று மன்மோகன் சிங் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications