ஆதாரமற்ற புகார்: ஜெ. மீது கிரிமினல் வழக்கு-தயாநிதி
சென்னை: தொடர்ந்து ஆதாரமற்ற புகார் அள்ளிவீசி வரும் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா மீது கிரிமினல் வழக்கு தொடரப் போவதாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
மத்திய சென்னை தேர்தல் பிரசார கூட்டத்தில் ஒரு பொய்யை ஜெயலலிதா அவிழ்த்துவிட்டுள்ளார். நான் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது என் வீட்டுக்கு 323 தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டதாகவும், அந்த இணைப்புகளை நான் சன் டிவியுடன் இணைத்து அதன் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தியதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
நான் மத்திய அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு, யாரோ அவசரத்தில் அனுப்பிய புகார் மீது அது உண்மையா என கண்டறிய அதனை சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் தொலைதொடர்பு துறைக்கு அனுப்பி விசாரிக்க கூறுகிறார். இதுதான் ஜெயலலிதா கொடுத்த ஆதாரத்தில் இருப்பது.
பின் தொலைதொடர்பு துறை அதனை விசாரித்து அந்த புகாரில் எள்ளளவும் ஆதாரமில்லை என அறிவித்துவிட்டது. ஜெயலலிதாவுக்கு அவசரம், முழுவதையும் அறிந்து கொள்ளாமல் முனை முறிந்த குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
மதுரையில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசியபோது, மதுரையில் 10ம் தேதி நடைபெற இருக்கும் சித்திரை திருவிழாவில் மாபெரும் குழப்பம் விளைவிக்க திமுகவினர் திட்டமிட்டு இருப்பதாகவும், அந்த திட்டத்தின் மூலம் மக்களிடையே பீதியை உண்டாக்கி 13ம் தேதி அவர்களை ஓட்டுப்போட விடாமல் தடுத்து கள்ள ஓட்டுப்போட எல்லா ஏற்பாடுகளும் நடந்துவிட்டதாக தனக்கு நம்பத்தகுந்த தகவல் வந்துள்ளதாக குற்றச்சாட்டை கூறினார்.
சித்திரை திருவிழா அமைதியாக எந்தவித சிறு தடங்களும் இன்றி நடந்தேறிவிட்டது. ஜெயலலிதாவின் சாயமும் வெளுத்துவிட்டது. அதுபோல திட்டமிட்டு, ஆதாரமற்ற புகாரை கூறிய ஜெயலலிதா மீது கிரிமினல் வழக்கு தொடர உள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.