இரட்டை இலைக்கு போட்டால் உதயசூரியனுக்கு விழுகிறதாம்-ஜெ சொல்கிறார்

சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்குச் சாவடியில் ஜெயலலிதா இன்று காலை வாக்களித்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
மாநிலம் முழுவதுமே வாக்குப் பதிவு எந்திரங்கள் சரியாக செயல்படவில்லை என்று எனக்கு புகார்கள் வந்து கொண்டுள்ளன. மத்திய சென்னை பார்த்தசாரதி பள்ளியில் உள்ள வாக்குப் பதிவு எந்திரத்தில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு போட்டால் மின்னணு எந்திரத்தில் உதயசூரியன் லைட் எரிகிறது. அந்த ஓட்டு திமுகவுக்குப் போகிறது.
தூத்துக்குடியிலும் இதே போல மின்னணு எந்திரத்தில் அதிமுகவுக்கு போடும் ஓட்டு திமுகவுக்கு விழுகிறது.
தென் சென்னையில் பூத் நம்பர் 91, 92 மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் சரியாக செயல்படவில்லை. இங்கு ஒரு தொகுதியில் காலை 7 மணிக்கு இரட்டை இலைக்கு ஓட்டு போட ஒருவர் முயன்றபோது அது திமுகவுக்கு விழுந்தது.
அந்த பூத்தில் 7 மணிக்கு முன்பே வெள்ளை சட்ட, கருப்பு பேண்ட் அணிந்த 10 பேர் உள்ளே இருந்துள்ளனர். அவர்கள் வெளியே போவதும் வருவதுமாக இருந்துள்ளனர். தொடர்ந்து ஓட்டு போட்டுக் கொண்டே இருந்துள்ளனர். அவர்களை மக்கள் பிடிக்க முயன்றபோது ஓடிவிட்டனர்.
அதே போல 150க்கும் மேற்பட்ட இடங்களில் மின்னணு எந்திரங்கள் சரியாக செயல்படாததால் மக்கள் தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் வாக்களிக்க விரும்பியும் முடியவில்லை.
ஒரு வாக்குச் சாவடியிலும் ஒரு போலீஸ்காரர் தான் உள்ளார். மத்தியப் படையினரை பார்க்கவே முடியவில்லை. காவல்துறையினரும் தேர்தல் அதிகாரிகளும் நியாயமான தேர்தல் நடக்க மக்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். மக்கள் தைரியமாக வாக்களிக்க வேண்டும்.
தேர்தல் முறையாக நடந்தால் அதிமுக கூட்டணி எல்லா இடங்களிலும் வெல்லும். எனது ஆதரவைக் கேட்டு பல கட்சிகளிடமிருந்தும் பேசுகிறார்கள். நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
தேர்தல் முடிவுக்குப் பின் கூட்டணிக் கட்சியினருடன் பேசிவிட்டு முடிவெடுப்பேன் என்றார் என்றார்.












Click it and Unblock the Notifications