3ல் கொங்கு வேளாளர் கட்சியால் தோற்றோம்-காங்
சென்னை: தமிழகத்தில் 16 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. 7 இடங்களில் தோல்வியடைந்துள்ளது. 3 தொகுதிகளில் தனது தோல்விக்கு கொங்கு வேளாளர் கட்சி பிரித்த வாக்குகளே காரணம் என காங்கிரஸ் கூறுகிறது.
அதிமுகவிடம் இழந்த 4:
சேலம், திருப்பூர், மயிலாடுதுறை, திருச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுகவிடம் காங்கிரஸ் தோற்றுள்ளது.
கம்யூனிஸ்டுகளிடம் இழந்த 2:
கோவை தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடமும், தென்காசி தொகுதியை இந்திய கம்யூனிஸ்டிடமும் காங்கிரஸ் இழந்துள்ளது.
மதிமுகவிடமும் தோல்வி..
மதிமுகவிடம் ஈரோடு தொகுதியை காங்கிரஸ் இழந்துள்ளது.
அக்கட்சியைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கடும் இழுபறிக்குப் பின் வெறும் 3,000 பிளஸ் வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றுள்ளார்.
தோல்விக்கு கொங்கு வேளாளர் கட்சியே காரணம்-காங்:
3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு கொங்கு வேளாளர் கட்சியே காரணம் என்று சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் சுதர்சனம் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
புதிதாக துவக்கப்பட்டுள்ள கொங்கு வேளாளர் கட்சி பிரித்த வாக்குகளால் தான் சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்திக்க வேண்டியதாயிற்று.
என் தோல்வி ஆச்சரியம் அளிக்கிறது..தங்கபாலு:
சேலத்தில் தோற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறுகையில்,
கடந்த 5 ஆண்டுகளாக சேலம் மக்களுக்கு நிறைய நலத் திட்டங்கள் செய்துள்ளேன். எனது பதவிக் காலத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் சேலம் கண்டுள்ளது. எனக்கு வாக்களித்த மக்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.
தேர்தலில் நான் தோல்வி அடைந்தது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. தோல்விக்கான காரணம் தெரியவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சில இடங்களில் தோல்வி அடைந்ததற்காக கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நான் விலக வேண்டிய அவசியம் இல்லை என்றார் தங்கபாலு.
கடந்த முறை தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 10 எம்பிக்கள் இருந்தனர். அது இம்முறை 9 ஆகிவிட்டது.