சத்தியத்தின் பெயரால் பதவியற்ற திமுக அமைச்சர்கள்
டெல்லி: நேற்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட 59 அமைச்சர்களில் 41 பேர் கடவுளின் பெயரால் உறுதிமொழி ஏற்றனர். திமுகவைச் சேர்ந்த 7 பேர் உள்ளிட்ட 14 அமைச்சர்கள் சத்தியத்தின் பெயரால் பதவியற்றுக் கொண்டனர்.
கர்நாடகத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே, பரத் சிங் சோலன்கி ஆகியோர் இந்திய அரசியல் சட்டத்தின் பெயரால் பதவியேற்றுக் கொண்டனர்.
ஆனால், பிரிதிவிராஜ் சவான், ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால், சல்மான் குர்ஷித் உள்ளிட்டோர் திமுக அமைச்சர்களைப் போல சத்தியத்தின் பெயரால் பதவியேற்றனர்.
அமைச்சர்களில் மிகவும் வயது குறைந்தவரான அகதா சங்மா (28) இந்தியில் பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்டார். இந்தி அவரது தாய்மொழி கிடையாது என்பதால் பலமுறை தவறாக வாசித்தார்.
ஜெய்ராம் ரமேஷ் பதவியேற்ற பிறகு அதற்கான பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்து போடாமல் இருக்கைக்கு திரும்பினார். அதிகாரிகள் சுட்டிக் காட்டியதும் சிரித்தபடியே திரும்பி வந்து கையெழுத்துப் போட்டார்.
ஐ.நா. சபை முன்னாள் துணை பொதுச் செயலாளரான சசி தரூர், திமுகவினரைப் போல வேட்டி-சட்டையில் வந்து பதவியேற்றார். கூடவே அங்கவஸ்திரமும் அணிந்திருந்தார்.
ஆனால், திமுகவினரில் நடிகர் நெப்போலியன் மட்டும் ஜீன்ஸ் பேண்ட், சட்டையில் வந்திருந்தார்.
திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 6 பேரும் மேற்கு வங்காள மாநிலத்தின் பாரம்பரிய வேஷ்டி, குர்தா, சால்வை அணிந்து வந்திருந்தனர்.
குஜ்ஜார் இனத்தை சேர்ந்த இளம் அமைச்சரான சச்சின் பைலட் தனது சமூகத்தின் பாரம்பரியமான வண்ணமயமான பெரிய தலைப்பாகை அணிந்தபடி பதவியேற்றார்.
தமிழக அமைச்சர்கள் 4ம் தேதி பொறுப்பேற்பு:
இதற்கிசையே தமிழ்நாட்டை சேர்ந்த மு.க.அழகிரி, ராசா, தயாநிதி மாறன், ஜி.கே. வாசன், பழனிமாணிக்கம், நெப்போலியன், ஜெகத்ரட்சகன், காந்தி செல்வன் ஆகியோர் இன்று காலை சென்னை திரும்பினர்.
முதல்வர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெறும் அவர்கள் பின்னர் சொந்த மாவட்டங்களுக்குச் செல்கின்றனர்.
ஞாயி்ற்றுக்கிழமை மீண்டும் டெல்லி திரும்பும் அவர்கள் திங்கள்கிழமை தங்கள் இலாகா பொறுப்புகளை ஏற்கின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம் மட்டும் ஏற்கனவே உள்துறை அமைச்சக பொறுப்பை ஏற்றுக் கொண்டுவிட்டார்.












Click it and Unblock the Notifications