தமிழகத்தில் இன்றும் இடியுடன் மழை பெய்யலாம்
சென்னை: தென் மேற்கு பருவ மழை மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளதால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் கூறுகையில், தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சென்னையில் சில பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். பகலில் 105 அல்லது 106 டிகிரி வெயில் அடிக்கும் என்று தெரிவித்துள்ளது.
அதற்கேற்ப காலை முதல் நல்ல வெயில் அடித்து வருகிறது. அதேசமயம், மேக மூட்டமும் அவ்வப்போது காணப்படுகிறது.
செனனையில் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. மாலையில் நல்ல காற்று வீசியது. இரவில் சென்னை புறநகர்ப் பகுதிகளில் லேசான மழை இருந்தது.
பஸ்சில் மின்னல் தாக்கி 7 பேர் காயம்:
இதற்கிடையே சென்னையில் அரசு பஸ் ஒன்றின் மீது மின்னல் தாக்கியதில் 7 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் நேற்று பகல் கடுமையான வெயில் அடித்து மக்களை வாட்டி வதைத்தது. ஆனால் இரவு சுமார் 8.30 மணிக்கு எதிர்பாராத வகையில் இடி, மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்தது.
எழும்பூர், புரசைவாக்கம், ஆயிரம்விளக்கு, நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், ராயப்பேட்டை என பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால் சாலைகளிலும், தெருக்களிலும் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில் கும்மிடிப்பூண்டிக்கு பக்கத்தில் இருக்கும் கவரப்பேட்டை என்னும் இடத்தில் ரோட்டில் போய் கொண்டிருந்த பஸ் ஒன்றின் மீது மின்னல் தாக்கியது. இதில் பஸ்சின் முன் கண்ணாடி உடைத்து நொறுங்கியது.
இதையடுத்து பயணிகள் அலறி அடித்து கொண்டு பஸ்சில் இருந்து வெளியே வந்தனர். பஸ்சின் முன் பகுதியில் அமர்ந்திருந்த அம்சா (30), குட்டியம்மா (38), பார்த்திபன் (12), செல்வம் (13), ராணி (40), அபிநயா (14), பிருந்தா (17) ஆகிய 7 பேர் காயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிக்சைக்காக சேர்க்கப்பட்டனர்.