கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு
லண்டன்: சர்வதேச சந்தையில் மீண்டும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயரத் துவங்கியுள்ளது. கிட்டத்தட்ட ஏழு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பேரலுக்கு 70 டாலர்களைத் தாண்டியுள்ளது கச்சா எண்ணெய்.
கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் வேலையிழக்கும் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது.
ஒரு கட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு பேரலுக்கு 22 டாலருக்கும் கீழே குறைந்திருந்தது. இதனால் கச்சா எண்ணெய் உற்பத்தியை அரபு நாடுகள் கட்டுப்படுத்தி வைத்தன.
ஆனால் இப்போது அமெரிக்காவில் வேலை இழப்புகள் குறைந்துள்ளன. வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் 22,000க்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளன.
இதனால் மீண்டும் கச்சா எண்ணெய் விலையும் உயர ஆரம்பித்துள்ளது. கடந்த 6 மாதங்களில் முதல்முறையாக மீண்டும் 70 டாலர்களைத் தாண்டியுள்ளது கச்சா எண்ணெய் விலை.
நியூயார்க்கில் கச்சா எண்ணெய் பேரலுக்கு 70.32 டாலர்களாக இருந்தது. இனி வரும் நாட்களில் இந்த விலை மேலும் உயர்க்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.