ஸ்டாலின், அன்பழகனுக்கு கூடுதல் அதிகாரங்கள் ஒதுக்கீடு
சென்னை: துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மேலும் பல பொறுப்புகள் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளன. அதேபோல நிதியமைச்சர் அன்பழகனுக்கும் சில பொறுப்புகள் கூடுதலாக தரப்பட்டுள்ளன.
ஜூன் 1ம் தேதியிட்டு இந்த கூடுதல் பொறுப்புகள் ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அரசின் தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி வெளியிட்ட உத்தரவு:
உள்துறையில் உள்ள சில முக்கிய விஷயங்கள் குறித்து முடிவெடுக்கும் வகையில் அதிகாரம்.
மாநிலத்தில் அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையில் நிகழ்வுகள் ஏற்பட்டால் அதை சமாளிக்கத் தேவையான உத்தரவுகளை துணை முதல்வர் பிறப்பிப்பார்.
சிறுபான்மை சமுதாயத்தினர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் நலன் சார்ந்த கொள்கைகளில் பாதிப்பு ஏற்படும்போது அதைக் களைய நடவடிக்கை எடுப்பார்.
குற்றவாளிகளை விசாரணையின்றி கைதுக்கு உட்படுத்தும் நடவடிக்கைக்கு வகை செய்யும் ஆலோசனை வாரியத்தை அமைப்பது.
கூடுதல் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்களின் பதவி உயர்வு ஆகியவற்றை முடிவு செய்வது.
மாவட்ட நீதிபதிகள், மாவட்ட கூடுதல் நீதிபதிகள், மாவட்ட இணை நீதிபதிகள், நகர சிவில் நீதிபதிகள், பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் உள்ளிட்டோர் நியமனத்தில் முடிவுகளை எடுப்பது.
நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை கைவிடுவதற்கான உத்தரவுகளை வெளியிடுவது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல நிதியமைச்சர் அன்பழகனுக்கும் சில கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.