தமிழர் படுகொலை-வேடிக்கை பார்த்த இந்தியா: திமுக
சென்னை: இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது என்று நாடாளுமன்றத்தில் திமுக எம்பி இளங்கோவன் குற்றம் சாட்டினார்.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அவர் பேசுகையில்,
1940ல் ஜெர்மனியில் ஹிட்லரால் லட்சக்கணக்கான யூத மக்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொடுமையை உலக நாடுகள் அனைத்தும் கண்டித்தன. இறுதியாக ஹிட்லர் தற்கொலை செய்து கொள்ள நேரிட்டது.
இப்போது இலங்கைத் தீவில் போர் நடைபெறாத பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர். 60 ஆண்டுகளுக்கு முன்னர் யூதர்கள் படுகொலையை உலகமே கண்டித்தது. ஆனால் இப்போது இலங்கைத் தமிழர்கள் படுகொலையை உலகம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.
குறிப்பாக, மிக நெருங்கிய அண்டை நாடான இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காண்பதாக பெருமைப்படுகின்ற நாம்; பல்வேறு மதங்களுக்கும், மொழிகளுக்கும் சம உரிமை வழங்கியிருப்பதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் நாம் தமிழர்கள் கொல்லப்படுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்கத் தவறிவிட்டோம்.
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து ஜனாதிபதி உரையில் எந்த உறுதியும் வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியையும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்கக் கூடியது சேது சமுத்திரத் திட்டம்.
ஆனால் ராமரின் பெயரால் இத்திட்டத்திற்கு தடை ஏற்படுத்தப்படுகிறது. இதனால் இந்த திட்டம் நிறைவேற வேண்டும் என எண்ணும் தமிழ்நாட்டு ராம பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
மத்திய அரசு இந்தத் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றுவோம் என்ற உறுதியை தமிழக மக்களுக்கு வழங்கியாக வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இத்திட்டத்தை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications