'குடிமக்கள்' வசதிக்காக பீரை இறக்குமதி செய்யும் தமிழக அரசு!
கோடை காலம் சுட்டெரிப்பதால் டாஸ்மாக் கடைகளில் பிற மது வகைகளை விட பீர்தான் பெருமளவில் விற்பனையாகிறது. விற்பனையாகும் அளவுக்கு சப்ளை இல்லாததால், பீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பீர் கிடைக்காமல் 'குடிமக்கள்' பெரும் அவதிக்கப்படுகின்றனர்.
இதையடுத்து டாஸ்மாக் நிறுவனம் வெளிமாநிலங்களிலிருந்து பீர் இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், 3 லட்சம் கேஸ் பீர் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
பீரை வெளிமாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யவிருப்பது இது 2வது முறை என்று அவர்கள் கூறுகின்றனர்.
பிரபலமான சாப் மில்லர் உள்ளிட்ட நிறுவனங்களில் டாஸ்மாக் சார்பில் பீருக்கு ஆர்டர் கொடுத்துள்ளனராம்.
தமிழகத்திலேயே தயாரிக்கப்படும் பீர் நிறுவனங்களுக்கு மட்டும்தான் தமிழகத்தில் அனுமதி அளிக்கப்படுகிறது. வெளிநாட்டு பிராண்டுகளை இங்கு தயார் செய்ய முடியாது.
அந்த வகையில் தற்போது தமிழகத்தில் பாலாஜி ப்ரூவரிஸ், மோகன் ப்ரூவரீஸ், எம்பீ ப்ரூவரீஸ் ஆகியவை உள்ளன.
தமிழகத்தில் அதிக அளவில் விற்பனையாகும் பீர் பிராண்ட் ஆக மார்க்கோ போலோவின் ஸ்டிராங் பீர் உள்ளது.
இந்தியாவின் குடிகார மாநிலங்களில் (அதாவது அதிகம் குடிப்பவர்கள் வரிசையில்) தமிழகம் 3வது இடத்தில் உள்ளதாம். முதலிடத்தை பஞ்சாபும், 2வது இடத்தை ஆந்திராவும் பெறுகின்றன.