இந்திய ஐடி துறைக்கு நம்பிக்கை தரும் ஜப்பான்!
அது... ஜப்பான்.
இந்திய ஐடி நிறுவனங்களின் 90 சதவிகித வருமானம் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவிலுள்ள நிறுவனங்களைச் சார்ந்தே இருந்தது.
ஆனால் இப்போது இந்த இரு பகுதிகளிலுமே பெரும் பொருளாதார மந்தம் நிலவுகிறது. பல நிறுவனங்கள் மூடப்பட்டன. இருக்கும் நிறுவனங்கள் இந்திய தொடர்புகளை முழுமையாகத் துண்டிக்கும் நிலைக்கு வந்துள்ளன. இந்தியாவில் அவுட்சோர்ஸிங் செய்தால், அந்த நிறுவனம் இனி அமெரிக்காவில் எந்த சலுகையையும் பெறவே முடியாது என்ற நிலையை அமெரிக்க அரசு உருவாக்கியுள்ளது. இதை நேரடியாக அதிபர் ஒபாமாவே தெரிவித்துவிட்டார்.
ஐரோப்பாவிலோ நிலைமை மகா மோசம். பல நாடுகளின் மத்திய வங்கிகள் செயலிழந்து போய், அவற்றின் பொருளாதார முறையே மறுசீரமைப்புக்குக் காத்திருக்கிறது.
இந்த நிலையில், இந்திய நிறுவனங்களின் முக்கிய வருவாய் ஆதாரமாகத் திகழ்வது இப்போதைக்கு ஜப்பான் மட்டுமே.
"இன்றைய சூழலில் இந்திய நிறுவனங்களின் இணக்கத்துக்குரிய ஒரே நாடு ஜப்பான்தான். அங்கு நமக்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. ஆனால் முன்பை விட குறைந்த செலவில் பணிகள் முடிய வேண்டும் என ஜப்பான் விரும்புகிறது. காரணம் எவ்வளவு குறைந்த செலவிலும் பணிகளைச் செய்துதர சீனா தயாராக உள்ளது.
எனவே நமது நிறுவனங்கள் அதனைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்...." என்கிறார் நாஸ்காம் தலைவர் சோம் மித்தல்.
உலகின் முதல் 1000 ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனங்களைப் பட்டியலிட்டால் அதில் இந்தியாவைச் சேர்ந்த 281 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோமொபைல் துறையில் இவற்றின் பங்களிப்பு ஜப்பானுக்கு அதிகம் தேவைப்படுகிறது.
ஏற்கெனவே டாடா, விப்ரோ மற்றும் இன்போஸிஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் ஜப்பானில் பெரிய அளவு கால் பதித்துவிட்டன.
ஜப்பானிய சூழல் மற்றும் அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப இந்திய நிறுவனங்கள் விட்டுக் கொடுத்து பணிகளைச் செய்யத் துவங்கினால், இந்திய ஐடி துறை இன்றைய நெருக்கடியை எளிதாகச் சமாளித்துவிடும் என்கிறார்கள் இந்தத் துறையில் நிபுணர்கள்.