எதிர்பார்ப்புகள் நிறைவேறினால் மின்தடை நீங்கும்-ஸ்டாலின்
திருச்சியில் 100வது சமத்துவபுரத்தை திறந்து வைக்க துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை நான்கு திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
துணை முதல்வர் பதவியுடன் கூடுதலாக சில பணிகளும் எனக்கு வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் தொழில் துறையும் ஒன்று. முதல்வர் கருணாநிதி பல ஆண்டுகளாக தொழில்துறையை தன்வசம் வைத்திருந்த தமிழக தொழில்துறையை நாட்டின் முன்மாதிரியாக கொண்டு வந்தார். பல நலதிட்டங்களை வகுத்தார்.
அவருடைய வழிகாட்டுதல், ஆலோசனையின் வழியில் தொடர்ந்து தொழில்துறையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம். அதற்கான முயற்சியில் தற்போதே ஈடுபட்டு வருகிறோம்.
நேற்று முன்தினம் தொழில்துறை கூட்டம் நடந்தது. சுமார் மூன்றரை மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில் பல கருத்துக்கள், பல பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இது குறித்து முதல்வரிடம் பேசவிருக்கிறேன். வருகிற சட்டசபை கூட்டத்தொடரில் தொழில்துறை மானிய கோரிக்கை தொடர்பாக முடிவு செய்யப்படும் என்றார் அவர்.
இதை தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்.
நிருபர்: திருச்சியில் வீடுகளுக்கு தினமும் 2 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. இந்த நிலை எப்போது சீராகும்?
ஸ்டாலின்: தமிழகத்தில் மின்தடை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. நாம் எதிர்பார்த்த மின்சாரம் கிடைத்தவுடன்மின்தடை முழுமையாக நீக்கப்படும். இது விரைவில் நடக்கும்.
நிருபர்: திருச்சியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா எப்போது அமையும்?
ஸ்டாலின்: திருச்சி அருகே நவல்பட்டு என்ற இடத்தில் இதற்காக 125 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும்.
நிருபர்: 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, இலவச கலர் டிவி போன்ற திட்டங்கள் ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கின்றன. இதே போல் வேறு எதாவது திட்டம் அறிவிக்கப்படுமா?
ஸ்டாலின்: இது குறித்து முதல்வர் முடிவு செய்து அறிவிப்பார்.
நிருபர்: 2 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கும் பணி மந்தமாக இருப்பது போல் தெரிகிறதே?
ஸ்டாலின்: சில இடங்களில் நிலம் கைப்பற்றுவதில் சட்டப்பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதை வருவாய்த்துறை அதிகாரிகள் பேசி தீர்த்து சரி செய்து வருகிறார்கள். இதில் தொய்வு ஒன்றும் இல்லை.
நிருபர்: பெரம்பலூரில் சிறப்பு பொருளாதார மண்டலம் எப்போது செயல்பட தொடங்கும்?
ஸ்டாலின்: பெரம்பலூரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக 3 ஆயிரம் ஏக்கர் இடம் பெறப்பட்டு விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்பட இருக்கிறது.
நிருபர்: புதிய தொழிற்சாலைகள் தொடங்கும்போது வேலை வாய்ப்பில் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமா?
ஸ்டாலின்: புதிய தொழிற்சாலைகளை அதிக அளவில் துவக்கி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது இந்த அரசின் கொள்கை முடிவுகளில் ஒன்று. வேலைவாய்ப்புகள் வழங்கும் போது இது கவனத்தில் கொள்ளப்பட்டு வருகிறது என்றார் ஸ்டாலின்.