வரதட்சணை கொடுமை: பெண் தற்கொலை- கணவர் குடும்பத்தார் கைது
சென்னை: சென்னையில் எம்பிஏ பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்துக்கு வரதட்சணை கொடுமை தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் கணவர், மாமியார், மாமனார் மற்றும் கணவரின் தம்பி ஆகியோரை கைது செய்துள்ளனர்.
சென்னை மகாலிங்கபுரம் லட்சுமணன் தெருவை சேர்ந்த நாராயணசாமி என்பவரின் மகள் கீதா ஆர்த்தி (27). எம்பிஏ பட்டதாரியான இவர் கல்லூரியில் படிக்கும் போது ஸ்டீபன் என்ற சரத்குமார் என்பவரை காதலித்தார்.
இதையடுத்து இந்த காதல் ஜோடிகள் இருவீட்டாரின் சம்மதத்தையும் பெற்றனர். இதையடுத்து திருமண பேச்சு நடந்தது. அப்போது ஸ்டீபன் வீட்டினர், நாராயணசாமியிடம் ரூ. 5 லட்சமும், 75 பவுன் நகையும் கேட்டுள்ளனர். ஆனால், நாராயணசாமி ரூ. 2 லட்சமும், 75 பவுன் நகையும் போடுவதாக கூற திருமணம் கடந்த 2007 நவம்பரில் நடந்துள்ளது.
ஆனால், திருமணம் முடிந்த சில மாதங்களிலே ஸ்டீபன் குடும்பத்தினர் ஆர்த்தியிடம் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். இவர்களது கொடுமையை தாங்க முடியாத தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது மகளின் சாவில் மர்ம இருப்பதாக நாராயணசாமி, சென்னை விருகம்பாக்கம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையி்ல்,
எனக்கு இரண்டு பெண்கள் உள்ளனர். மூத்த பெண் தான் கீதா ஆர்த்தி. கல்லூரியில் உடன் படித்த சரத்குமார் என்பவரை காதலித்தாள். அவர்களுடைய காதலை ஏற்றுக்கொண்டு திருமணத்திற்கு சம்மதித்தேன்.
சரத்குமாரின் தந்தை சி.பி.ஜெயின், தாயார் சாவித்திரி ஆகியோரிடம் திருமணம் பற்றி பேசினேன். அப்போது 75 பவுன் நகை, ரூ.5 லட்சம் வரதட்சணையாக கேட்டார்கள். அதற்கு நான், அவ்வளவு தர முடியாது என்று ரூ. 2 லட்சமும், 75 பவுன் நகை கொடுப்பதாக கூறினேன். இதையடுத்து சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் திருமணம் விமரிசையாக நடைபெற்றது.
திருமணம் முடிந்த சில மாதங்களிலே மாப்பிள்ளை வீட்டார் கார் வாங்க வேண்டும், ரூ.3 லட்சம் வாங்கி வா என என் மகளை கொடுமைப்படுத்தினார்கள். நானும் ரூ.1 லட்சம் பணம் கொடுத்தேன். பின்னர் ஒவ்வொரு பண்டிகையின் போதும் அதை வாங்கி வா, இதை கொண்டு வா என வரதட்சனை கொடுமையை தொடர்ந்தார்கள்.
இதற்கிடையே, சைதாப்பேட்டையில் இருந்த எனக்கு சொந்தமான பிளாட் ஒன்றை அவருடைய பெயருக்கு மாற்றி தருமாறு ஸ்டான்லி அடிக்கடி எனது மகளிடம் வற்புறுத்தியுள்ளார். எனது மகள் அடிக்கடி எனக்கு போன் செய்து அழுவாள்.
அதேபோல் ஸ்டான்லியின் தம்பி சந்தோஷ் என் மகள் தனியாக இருந்த போது ஆபாசமாக பேசி வந்துள்ளான். மொத்தத்தில் என் மகள் அந்த வீட்டில் கொத்தடிமை போல் நடத்தப்பட்டுள்ளார். நானும் என் மகளுக்காக அனைத்தையும் பொறுத்து கொண்டேன்.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி எனது மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர். உடனே நாங்கள் சென்று பார்த்தபோது கழுத்து அறுப்பட்ட நிலையில் எனது மகளை சோபாவில் படுக்க வைத்திருந்தனர். எனது மகளின் சாவில் மர்மம் உள்ளது. உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் வரதட்சனை கொடுமை பிரிவு 304ன் கீழ் வழக்கு பதிவு செய்து ஸ்டீபன், அவரது தந்தை, தாயார் மற்றும் சகோதரர் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். நேற்று அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பின்னர் 15 நாள் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.