இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்கள் ராமேஸ்வரம் திரும்பினர்
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் அட்டூழியமாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 9 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு நேற்று ஊர் திரும்பினர்.
கடந்த 8-ந் தேதி மீன்பிடிக்க சென்ற தேவதாஸ், பைராம்கான் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு படகுகளையும், அவற்றில் இருந்த 9 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர்.
இந்த படகுகளையும், மீனவர்களையும் மன்னார் போலீஸ் நிலையத்தில் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர்.
மன்னார் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த 9 மீனவர்களையும் அனுராதபுரம் சிறையில் அடைத்தனர்.
அவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்தி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு நேற்று முன்தினம் கடிதம் ஒன்றை எழுதினார். மேலும் மீனவர்களை மீட்கவும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.
இதையடுத்து 9 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
நேற்று மாலை 3 மணியளவில் இந்த 9 பேரும், அவர்களது படகுகளும் இந்திய கடலோரக் காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இரவு 9 மணியளவில் ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.












Click it and Unblock the Notifications