மின்னணு எந்திரங்களுக்கு தடை கோரி பாமக வழக்கு
பாமக தலைவர் ஜி.கே.மணி தாக்கல் செய்துள்ள மனுவில்,
1998ம் ஆண்டுக்கு பிறகு படிப்படியாக தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மின்னணு வாக்குப் பதிவுக்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
வாக்குப் பதிவு எந்திரத்தை ஆளும் கட்சிக்கு சாதகமாக பயன்படுத்த முடியும் என சந்தேகிக்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கு முன்பாக மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை பயன்படுத்த கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தோம்.
ஆனால், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஆளும் கட்சி துணையோடு மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் முறைகேடுகள் செய்யப்பட்டன.
மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு சார்பாக பயன்படுத்த முடியும் என்பதை நிபுணர்களைக் கொண்டு நிரூபிக்க ஒரு காட்சி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்தோம். ஆனால் தேர்தல் ஆணையம் எந்த பதிலும் அளிக்கவில்லை.
மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை மேலை நாடுகளில் பயன்படுத்துவதில்லை. மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் பாதுகாப்பானதா என்பதை நிபுணர்கள் குழுவைக் கொண்டு ஆராய வேண்டும். அதுவரை மின்னணு வாக்குப் பதிவுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், மின்னணு வாக்குப் பதிவுக்கு தடை விதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் எனவே கோரிக்கையை மாற்றி புதிய மனு சமர்ப்பிக்கும்படி கூறினர்.
இதை ஜி.கே.மணி தரப்பும் ஏற்றுக் கொண்டு புதிய மனுவை தாக்கல் செய்வதாகக் கூறினார். இதனையடுத்து வழக்கு விசாரணை 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.