சென்னையின் மையப் பகுதியில் கன்னடக் கவிஞருக்கு சிலை- கன்னட அமைப்பு புது நிபந்தனை
பெங்களூர் அல்சூர் ஏரிப் பகுதியில் தமிழ்ச் சங்கம் சார்பில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையைத் திறக்க விடாமல் அங்குள்ள கன்னட அமைப்புகள் இடையூறு செய்து வருகின்றன.
பல ஆண்டுளாக சாக்குப் பையில் மூடிக் கிடக்கிறது வள்ளுவர் சிலை.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண கன்னடக் கவிஞர் சர்வஞ்னாவின் சிலையை சென்னை அயனாவரத்தில் எழுப்ப அனுமதிக்கலாம் என தீர்வு கூறப்பட்டது. இதை கன்னட அமைப்புகள், கர்நாடக அரசு ஆகியவை ஏற்றுக் கொண்டன.
இதையடுத்து சமீபத்தில் சென்னைக்கு வந்த கர்நாடக முதல்வர் எதியூரப்பா, பெங்களூர் திருவள்ளுவர் சிலைத் திறப்புக்கு வருமாறு முதல்வர் கருணாநிதிக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில் கன்னட ரக்சன வேதிகே என்ற கன்னட அமைப்பு புதுப் பிரச்சினையைக் கிளப்பியுள்ளது. சென்னை நகரின் மையப் பகுதியில், சர்வஞ்னரின் சிலையை வைத்தால்தான் திருவள்ளுவர் சிலையைத் திறக்க அனுமதிப்போம் என அந்த அமைப்பின் தலைவர் நாராயண கெளடா கூறியுள்ளார்.
கர்வார் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை நகரின் மையப் பகுதியில் சர்வஞ்னரின் சிலை திறக்கப்பட வேண்டும். ஆனால் அயனாவரத்தில் உள்ள கன்னட பவனின் வளாகத்திற்குள் அந்த சிலையை திறக்க சதி நடக்கிறது.
இதை அனுமதிக்க முடியாது. சென்னையின் மையப் பகுதியில் சர்வஞ்னரின் சிலையைத் திறந்தால்தான் வள்ளுவர் சிலையைத் திறக்க அனுமதிப்போம் என்றார்.
மேலும், அடுத்த மாதம் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், பெல்காம் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து மனு அளிக்கப் போவதாகவும் கெளடா தெரிவித்தார்.