தாழ்த்தப்பட்டோர் நலனுக்கு தனி அமைச்சகம்-திருமா
சென்னை: நாட்டின் மக்கள் தொகையில் 16.23 சதவீதம் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் நலனுக்கென தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
கடந்த மாதம் 8ம் தேதி மக்களவையில் எனது கன்னிப்பேச்சில், பழங்குடியினருக்கு தனி அமைச்சகம் அமைக்கப்பட்டிருப்பதைப் போலவே தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஒரு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்ததை தங்களுக்கு நினைவூட்டுகிறேன்.
2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டும் 16.23 விழுக்காடு உள்ளனர். அவர்கள் அனைத்து மாநிலங்களிலும் வாழ்கிறார்கள்.
கிராமப்புறங்களில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களின் மொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ 75 விழுக்காட்டினர் நேரடியாகவோ மறைமுகமாகவோ வேளாண் தொழிலுடன் தொடர்புடையவர்களாக உள்ளனர்.
இத்தகைய சூழ்நிலையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒரு தனி அமைச்சகமும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக ஒரு தனி அமைச்சகமும் ஊனமுற்றோர், மூத்த குடிமக்கள் போன்ற பிற பிரிவினருக்கென தனித்தனி அமைச்சகங்களும், உருவாக்கப்பட்டதால்தான், இப்பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் அனைவரும் அவரவர் எதிர்கொள்ளும் வெவ்வேறு சிக்கல்களின் தன்மைக்கேற்றபடி, வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான அரசின் முழுக்கவனத்தையும் பெற முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், ஊனமுற்றோர் மற்றும் மூத்தகுடி மக்கள் ஆகிய பிரிவினர்களுக்கென தனித்தனி அமைச்சகங்கள் அமைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.