ஊழல்: 4 ஊராட்சி தலைவர்கள் பதவி பறிப்பு
வேலூர்: மக்கள் வளர்ச்சி நிதியில் ஊழல் செய்த நான்கு ஊராட்சி மன்ற தலைவர்கைளை வேலூர் மாவட்ட கலெக்டர் பதவி நீக்கம் செய்துள்ளார். அவர்களில் இருவர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாவட்டத்தில் இருக்கும் சில ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் தங்களது பஞ்சாயத்து பகுதிகளுக்கு கிடைக்கும் அரசின் நிதியில் ஊழல் செய்வதாக மாவட்ட கலெக்டர் ராஜேந்திரனுக்கு புகார்கள் வந்து குவிந்தன.
இதையடுத்து அவர் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் சிறப்பு தணிக்கை செய்ய உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அந்த பகுதிகளில் சிறப்பு தணிக்கை குழுவினர் அதிரடியாக கணக்குகளை சரி பார்த்தனர்.
அப்போது தமிறி ஒன்றியத்துக்குட்பட்ட மோசூர் ஊராட்சி தலைவி விஜயலட்சுமி, குடியாத்தம் ஒன்றியம் செங்குன்றம் நகராட்சி தலைவர் லட்சுமி, ஆற்காடு ஒன்றியத்தில் இருக்கும் நந்தியானம் ஊராட்சி தலைவர் கருணாநிதி மற்றும் பேரனாம்பட்டு ஒன்றியம் வடகரை ஊராட்சி தலைவர் உட்பட 4 பேர் ஊழல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கலெக்டர் ராஜேந்திரன் அவர்கள் நான்கு பேரையும் பஞ்சாயத்து சட்ட விதிமுறை 205ன் கீழ் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.