சென்செக்ஸ் இரண்டாவது நாளாக 400 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு!
மும்பை: தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய பங்குச் சந்தையில் காளையின் துள்ளல் தொடர்கிறது.
பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த மும்பை பங்குச் சந்தை, நேற்று செவ்வாய்க்கிழமை 453 புள்ளிகள் உயர்வைச் சந்தித்து, 13,853 புள்ளிகளாக உயர்ந்தது.
இந்த நிலை இன்றும் தொடர்ந்ததால் சென்செக்ஸில் 436 புள்ளிகள் உயர்ந்தன.
கடந்த ஒரு வாரகாலத்தில் 10 சதவீத அளவுக்குச் சரிவைச் சந்தித்து, ரூ 1.70 லட்சம் கோடிகளுக்கும் மேல் இழந்த பங்குச் சந்தை கடந்த இரு தினங்களாக மீண்டு வருகிறது.
தனியார் முதலீடுகள் முடங்கியுள்ள நிலையில் பொருளாதாரத்தை ஊக்குவிக்க அரசு பெருமளவில் கடன் வாங்க முடிவு செய்துள்ளது. இதை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்த பிறகுதான் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை உருவானது.
மேலும் அமெரிக்கா தவிர்த்த பிற நாடுகளில் பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் தெரியத் துவங்கியிருப்பதும் இந்த சாதகமான போக்கு நிலவக் காரணம் என்று கூறப்படுகிறது.
இன்று வர்த்தகம் துவங்கிய சிறிது நேரத்தில் மளமளவென சென்செக்ஸ் குறியீட்டெண்கள் உயர்ந்தன.
வர்த்தக நேரம் முடிவுறும் தருவாயில் 400 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு கண்டுள்ளது சென்செக்ஸ். நிப்டியில் 134 புள்ளிகள் உயர்ந்துள்ளது. புளூ சிப் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் நல்ல லாபத்தில் கைமாறின. நடுத்தர மற்றும் சிறிய ரக பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கும் இன்று லாபம் கிடைத்தது.
இன்போஸிஸ் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனப் பங்குகள் மட்டுமே இன்று நஷ்டத்தைச் சந்தித்தன.