மேட்டூருக்கு அதிகளவில் நீர் வரத்து - காவிரியில் வெள்ளப் பெருக்கு
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு அபரிமிதமான அளவில் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கர்நாடகம் மற்றும் கேரளாவில் பலத்த மழை பெய்து வருவது. பருவ மழை தீவிரமடைந்திருப்பதால் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
கபிணி அணை ஏற்கனவே நிரம்பி விட்டது. இதையடுத்து அங்கிருந்து உபரி நீர் பெருமளவில் திறந்து விடப்படுகிறது. இதேபோல கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்தும் பெருமளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்தத் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 54 ஆயிரத்து 567 கன அடி நீர் வந்தது.
அணையின் நீர்மட்டம் 74.28 அடியாக இருந்தது. அணைக்கு தொடர்ந்து அதிக அளவில் நீர்வந்து கொண்டிருப்பதால் இன்னும் ஒரு சில நாட்களில் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
90 அடியை அணை எட்டினால் பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விடப்படும்.
தற்போது மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.