ஜூவிக்கு எதிரான வழக்கு-ராசாவுக்கு அபராதம்
சென்னை: ஜூனியர் விகடன் இதழில் தன்னைப் பற்றியும், தனது குடும்பத்தினரைப் பற்றியும் செய்திகள், புகைப்படங்கள் வெளியிடுவதற்குத் தடை விதிக்கக் கோரி மத்திய அமைச்சர் ராசா தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், இப்படி ஒரு வழக்கை தொடர்ந்தற்காக அவருக்கு ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் நடந்ததாக கூறப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா பற்றி ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டது.
இதையடுத்து ஜூனியர் விகடன் இதழ், தனது குடும்பத்திற்கு எதிராக செய்திகள், படங்கள், கட்டுரைகள் ஆகியவற்றை வெளியிட்டு வருகிறது. இவை உண்மைக்கு மாறானவை. எனவே இவற்றை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று ராசா சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை ஏற்று கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
இதை நீக்கக் கோரி ஜூனியர் விகடன் உயர்நீதிமன்றத்தை அணுகியது. அதில்,
மத்திய அமைச்சர் என்ற முறையில், பொது நபர் என்ற அடிப்படையிலேயே ராசா பற்றி செய்திகள் வெளியிடப்பட்டன. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த செய்திகள் வெளியிடப்பட்டன. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி செய்திகள் வெளியிடவில்லை. எனவே இதில் அவதூறு என்பதற்கு இடமில்லை.
மேலும் அவர் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படத்தை தான் நாங்கள் வெளியிட்டோம். எனவே, தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதை விசாரித்த நீதிபதி சந்துரு,
தேர்தலில் போட்டியிடுபவர்கள் பற்றியும், அவர்களுடைய குடும்பத் தினரை பற்றியும், கடந்த கால வாழ்க்கை குறித்தும், அவர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் மக்கள் அறிந்து கொள்ள முழு உரிமை இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருக்கிறது.
மேலும் பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்களின் தனிப்பட்ட வாழக்கையும் வெளிப்படையாகி விடும். தனிப்பட்ட வாழ்க்கை குறித்த செய்தி வெளியிடவில்லை. பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களுக்கு எதிராக செய்திகள் வெளியிடாமல் தடுக்க முன் தடை பெறுவதற்கு எந்த சட்டமும் இல்லை.
இப்படி தடை விதிக்க முற்படுவது விமர்சன குரல் வளையை நெறிக்கும் முயற்சியாகும். அரசியல் நோக்கத்தோடு விதிக்கப்படும் தணிக்கைக்கு சமமானதாகும் என்றும் அத்தகைய நடவடிக்கை ஆட்சேபனைக்கு உரியது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
பொது வாழ்வில் ஈடுபடுபவர்கள் தங்கள் மீதான விமர்சனங்களை அலட்சியப்படுத்த வேண்டும். சில நேரங்களில் தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்கப்பட முடியாததாகும். எனவே, ஏற்கனவே விதிக்கப்டடிருந்த இடைக்கால தடை நீக்கப்படுகிறது.
மேலும் மனுதாரருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை ஜூனியர் விகடனுக்கு வழங்க உத்தரவிடுகிறேன் என்று தீர்ப்பளித்தார்.