தோல்வி பயத்தால் தேர்தலை சந்திக்க பயப்படுகிறது அதிமுக - மு.க.அழகிரி
மதுரை: தோற்றுப் போய் விடுவோம் என்ற பயத்தால்தான் இடைத் தேர்தலைப் புறக்கணிக்கிறது அதிமுக என்று மத்திய அமைச்சரும், தென் மண்டல திமுக அமைப்புச் செயலாலருமான மு.க.அழகிரி கூறியுள்ளார்.
திமுகவின், இடைத் தேர்தல் வெற்றி மன்னன் மு.க.அழகிரி வருகிற 5 தொகுதி இடைத் தேர்தலை சந்திக்கத் தயாராகி விட்டார்.
தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றி குறித்தும், தேர்தல் பணி குறித்தும் விவாதிப்பதற்காக தி.மு.க. தென்மண்டல மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை மு.க.அழகிரி சனிக்கிழமை கூட்டியுள்ளார்.
தயா மஹாலில் கூட்டம்...
இது குறித்து மு.க.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென் மண்டலத்திற்கு உட்பட்ட 3 சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக, தி.மு.க. தென் மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு மதுரை தயா மகாலில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் தென் மண்டல மாவட்ட செயலாளர்களும், மண்டலத்திற்கு உட்பட்ட அமைச்சர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, மதுரை எம்.பி தொகுதி மக்கள் குறை தீர்ப்பு அலுவலகத்திற்கு அழகிரி வந்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மதுரை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட மக்கள் குறைதீர்க்கும் அலுவலகம் ஆகஸ்ட் 3ல் திறக்கப்படும். இங்கு பொது மக்கள் என்னை சந்தித்து மனு அளிக்கலாம்.
நான் இல்லாத நாட்களில் உதவியாளர் அல்லது திமுக நிர்வாகிகளிடம் மனு கொடுக்கலாம். அதன் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுத்து குறைகள் தீர்க்கப்படும் என்றார்.
இடைத்தேர்தல் நடக்கும் கம்பம், இளையாங்குடி, ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளின் நிலவரம் எப்படி உள்ளது என்ற கேள்விக்கு, இடைத்தேர்தல்களில் வெற்றி எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியும். திமுக அணி நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.
அதிமுக தேர்தலைப் புறக்கணிப்பது குறித்து கேட்டபோது,
தோல்வி பயத்தால் முன் கூட்டியே தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளதாக கருதுகிறேன் என்றார்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் போலத் தெரிகிறதே என்ற கேள்விக்கு, அது அந்தக் கட்சிகளின் முடிவு. யார் போட்டியிட்டாலும் திமுக அணி 5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றார்.
மேலும், எப்போதும் போல் திமுக அரசின் சாதனைகளையும், திட்டங்களையும் சொல்லி பிரசாரம் செய்வோம் என்றும் அழகிரி தெரிவித்தார்.
அழகிரியின் பிரசார உத்தி ஏற்கனவே பல முக்கிய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளதால், வருகிற இடைத் தேர்தலில் தென் மண்டலத்திற்குட்பட்ட 3 தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என்று இப்போதே, திமுக, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக பணிகளைத் தொடங்க ஆயத்தமாகி வருகின்றனர்.