மதுரை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகனை துண்டு துண்டாய் வெட்டி பிரிட்ஜில் வைத்த தாய்!
மதுரை: கள்ளக்காதலைக் கண்டித்து சண்டை போட்ட மகனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி, பிரிட்ஜில் வைத்துப் பூட்டிய பெண்ணை மதுரை போலீஸார் கைது செய்துள்ளனர். கள்ளக்காதலரும் கைது செய்யப்பட்டார்.
மதுரை பொன்மேனி மீனாட்சி நகர் 1-வது தெருவில் வசித்து வருபவர் மேரி. இவருக்கு 42 வயதாகிறது. கணவர் இறந்து விட்டார். இவருக்கு கிருஷ்ணமூர்த்தி (24) என்ற மகன் மட்டும் உள்ளார்.
மகனுடன் வசித்து வந்த மேரிக்கு, எஸ்.எஸ். காலனியைச் சேர்ந்த 38 வயதான பாட்சா என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இது கிருஷ்ணமூர்த்திக்குத் தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தார். தாயைக் கண்டித்துள்ளார். இருந்தாலும் மகனுக்குத் தெரியாமல் கள்ளக்காதலைத் தொடர்ந்துள்ளார் மேரி.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு தனது வீட்டில் கிருஷ்ணமூர்த்தி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பாட்சா வந்துள்ளார்.
அவரைப் பார்த்ததும் கிருஷ்ணமூர்த்தி ஆவேசமடைந்தார். பாட்சாவுடன் சண்டையி்ல் இறங்கினார் கிருஷ்ணமூர்த்தி. அப்போது பாட்சாவும், மேரியும் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியை சரமாரியாக அடித்துள்ளனர். இதில் அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து கிருஷ்ணமூர்த்தியின் உடலை இருவரும் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டியுள்ளனர். பின்னர் உடல் பாகங்களை பிளாஸ்டிக் பையில் போட்டு வீட்டில் இருந்த பிரிட்ஜுக்குள் வைத்து விட்டனர்.
ஆனால் இன்று காலை வீட்டிலிருந்து துர் நாற்றம் வீசத் தொடங்கியதும் அக்கம் பக்கத்தினர் மேரியிடம் விசாரித்துள்ளனர்.
அவர் முன்னு்குப் பின் முரணாக பேசியுள்ளார். மேலும் கிருஷ்ணமூர்த்தியையும் காணாததால் அவர்கள் சந்தேகமடைந்து, போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து வீட்டை சோதனையிட்டனர். பிரிட்ஜைத் திறந்து பார்த்தபோது அதில் இருந்த பிளாஸ்டிக் பைகளைப் பார்த்து எடுத்துப் பிரித்தனர். அதில் உடல் பாகங்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ந்து போயினர்.
இதையடுத்து மேரி மற்றும் பாட்சா இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு நகைக் கடை புரோக்கர் சுரேஷ்குமார் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டு உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு தெருக்களில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மதுரையில் பெற்ற மகனை தாயே இப்படி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த சம்பவம் மதுரையை உலுக்கியுள்ளது.
2 வயது குழந்தையை கொன்ற தாய், காதலன்...
இதற்கிடையே, விளாத்திகுளம் அருகே 2 வயது பெண் குழந்தையை கொன்று நாடகமாடிய தாய் மற்றும் கள்ளகாதலன் கைது செய்யப்பட்டனர்.
விளாத்திகுளத்தை சேர்ந்த ராமு என்பரவது மனைவி மாரிஸ்வரி. திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 வயதில் புனிதா என்ற குழந்தை உள்ளது. ஒரு வருடத்திற்கு முன் குடும்ப தகராறு காரணமாக மாரிஸ்வரி கணவரை பிரிந்து தனது குழந்தையுடன் வேம்பார் அருகேயுள்ள கிழவிபட்டியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் அங்கு கட்டிட வேலைக்காக வந்த நாகலாபுரத்தை சேர்ந்த காந்தாரி முத்துவுடன் மாரீஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டது. காந்தாரிமுத்து திருமணமானவர். அவருடன் மாரீஸ்வரி தனது குழந்தையுடன் நாகலாபுரத்தில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.
இந்நிலையில் குழந்தை புனிதாவிற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதாக சொல்லி மாரீஸ்வரியும், காந்தாரியும் விளாத்திகுளத்திலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஆனால், குழந்தையின் சாவி்ல் மர்மம் இருப்பதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து விஏஓ சந்தண மாரியம்மாள் புதூர் போலீசில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் சுகா தேவி குழந்தையின் உடலை கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
விசாரணையில் கள்ள தொடர்புக்கு குழந்தை இடையூறாக இருந்ததால் தாயும், கள்ள காதலனும் சேர்ந்து குழந்தையை கொன்றது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.