ஜாக்சன் டாக்டர் வீட்டில் போலீஸார் மீண்டும் ரெய்டு
லாஸ் வேகாஸ்: லாஸ் வேகாஸில் உள்ள மைக்கேல் ஜாக்சனின் டாக்டர் கான்ராட் முர்ரேவின் வீட்டை போலீஸார் மீண்டும் முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது செல்போன்கள், ஒரு கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
டாக்டர் மீதான சந்தேகம் மேலும் வலுத்துள்ளதைத் தொடர்ந்து இந்த 2வது சோதனை நடைபெற்றுள்ளது.
டாக்டர் கடைசி நேரத்தில் கொடுத்த அதிக அபாயகரமான மயக்க மருந்தே ஜாக்சனின் உயிரைக் குடித்ததாக தகவல் வெளியான அடுத்த நாளே இந்த சோதனை நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து முர்ரேவின் வழக்கறிஞர் எட் செர்னாப் கூறுகையில், ஹூஸ்டன் அலுவலகத்தில் கடந்த வாரம் சோதனை நடந்தது. இந்த நிலையில் லாஸ் வேகாஸில் உள்ள டாக்டர் முர்ரேவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
கொலைக் குற்றத்திற்கான ஆதாரத்தைத் திரட்டும் வகையில் இந்த சோதனை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாக்சன் தொடர்பான மருத்துவ ஆவணங்களை போலீஸார் தேடினர். மேலும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்களையும் தேடினர்.
சோதனை நடந்தபோது டாக்டர் முர்ரேவும் வீ்ட்டில் இருந்தார். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் சோதனை நடைபெற்றது. அதிகாரிகளுக்கு உதவினார், ஒத்துழைத்தார் என்றார்.
ஜாக்சனுக்கு டாக்டர் முர்ரே கொடுத்த புரபஃபால் மயக்க மருந்தே அவரது மரணத்திற்குக் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக இந்த மருந்து கொடுக்கப்பட்டதால்தான் ஜாக்சன் மரணத்தைச் சந்தித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே விரைவில் ஜாக்சன் மரணத்திற்கான காரணத்தை தெரிவிக்கவிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications