நாகர்கோவில் அருகே போலீஸ் - வக்கீல்கள் மோதல்
நாகர்கோவில்: நாகர்கோயில் அருகே காவல் நிலையத்தில் வழக்கு விசாரணை தொடர்பாக வக்கீலுக்கும், போலீசாருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாகர்கோவிலை சேர்ந்த வக்கீல்கள் மணிகண்டன், சுபாஷ், ரமேஷ் ஆகியோர் தக்கலை போலீஸ் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு சென்றுள்ளனர்.
சிவில் வழக்கு என்பதால் முதலில் வாதி, பிரதியிடம் பேசுவதாகவும், வக்கீல் உட்பட வேறு அனைவரும் வெளியே செல்லுமாறும் இன்ஸ்பெக்டர் சுதேசன் என்பவர் கூறியுள்ளார்.
இதற்கு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் வக்கீல்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தகவல் அறிந்த வக்கீல்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இன்ஸ்பெக்டர் சுதேசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி திடீர் ஆர்பாட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்த எஸ்.பி. சண்முகவேல் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது.
ஆனால், வக்கீல் தரப்பிலும், போலீஸ் தரப்பிலும் தனித்தனியே புகார்கள் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் சுதேசன் தக்கலை மருத்துவமனையில் உடல் நலம் சரியில்லை என்று கூறி சேர்ந்துள்ளார்.