கோயில் விழாவில் குத்தாட்டம் - தடுத்த போலீஸுக்கு அடி
வள்ளியூர்: வள்ளியூர் அருகே கோயில் திருவி்ழாவில் குத்தாட்டம் போட்டதை தடுத்த போலீசாரை ஒரு கும்பல் சராமரியாக தாக்கியது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வள்ளியூர் அருகேயுள்ள நம்பியான்விளை பத்ரகாளியம்மன் கோவில் கொடைவிழா நேற்று துவங்கியது. இதையொட்டி நேற்றிரவு சிறுவர், சிறுமியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. சினிமா பாடல்களுக்கு ஏற்றவாறு சிறுவர், சிறுமிகள் ஆடிக் கொண்டிருந்தனர்.
குத்துப்பாடல்களுக்கு சிறுவர்கள் போட்ட ஆட்டம் பார்வையாளர்கலையும் வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து கூட்டத்திலிருந்த சிலர் மேடைக்கு முன்பு சென்று ஆடத் துவங்கினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் நந்தகோபால் என்பவர் குத்தாட்டம் போட்டவர்களை கண்டித்தார்.
ஆனால் பாடல் மயக்கத்தில் ஆடிக் கொண்டிருந்தவர்களுக்கு போலீஸ்காரரின் எச்சரிக்கை காதில் விழவி்ல்லை.
உற்சாகத்தில் ஒரு சிலர் ஆடியதை பார்த்த மேலும் சிலருக்கு மேடை முன்பு ஆடத் தோன்றியது. பார்வையாளர்களின் விசில் சத்தம் வேறு அவர்களை உற்சாகப்படுத்தவே சிறிது நேரத்தில் ஆட்டம் போடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே சென்றது.
இதையடுத்து மேடை முன்பு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் ஆட்டம் போட்ட இருவரை போலீஸ்காரர் நந்தகோபால் பிடிக்க முயன்றார்.
இதனால் ஆத்திரமடைந்த 20க்கும் மேற்பட்டோர் அவரை அவதூறாக பேசி கீழே தள்ளி தாக்கியனர். பின்னர் ஆட்டம் போட்ட இருவரையும் மீட்டு சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் ஜான்கென்னடி, சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அதே ஊரை சேர்ந்த ராஜதுரை, வெள்ளத்துரை, செல்வராஜ் மகன் முத்து, ஜெயராம், இசக்கி்முத்து ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.