பன்றி காய்ச்சலால் 14 வயது சிறுமி சாவு-இந்தியாவில் முதல் பலி
மும்பை: இந்தியாவில் பன்றி காய்ச்சலுக்கு புனேவைச் சேர்ந்த14 வயது சிறுமி பலியாகியுள்ளார். நாட்டில் இந்த நோய்க்கு பலியாகியுள்ள முதன் இந்தியர் இவரே.
நாட்டிலேயே அதிகபட்சமாக புனே நகரில் தான் 500க்கும் அதிகமானோருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு உள்ளது. அவர்கள் அனைவருக்கும் தனி அறைகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ரியா ஷேக் என்ற 14 வயது சிறுமியும் ஒருவர்.
நோய் தாக்குதல் மிக மோசமாக இருந்ததால், கடந்த சில நாட்களாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
இந் நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதன் மூலம் இந்தியாவில் பன்றி காய்ச்சலுக்கு முதல் உயிர் பலியாகி இருக்கிறது.
மருத்துவமனை மீது முதல்வர் புகார்:
இந் நிலையில் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு சிறுமி இறந்தற்கு தனியார் மருத்துவமனையின் கவனக் குறைவே காரணம் என மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் புகார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்புக்குள்ளாகியுள்ள அனைவரையும், சுகாதார துறை அதிகாரிகள் சென்று சந்தித்து, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சை குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் சவான்.