Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேபியை இந்தியாவிடம் ஒருபோதும் ஒப்படைக்க மாட்டோம் - இலங்கை

Subscribe to Oneindia Tamil

Selvarasah Padmanathan
கொழும்பு: கைது செய்யப்பட்டுள்ள கேபி என்கிற செல்வராசா பத்மநாதனை ஒருபோதும் விசாரணைக்காக இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்லா கூறியுள்ளார்.

இதுகுறித்து கண்டியில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில், இந்தியாவிடம் கேபியை ஒருபோதும் ஒப்படைக்க மாட்டோம்.

அவர்களுக்கு வேண்டும் என்றால் இங்கு வந்து விசாரித்து விட்டுப் போகட்டும். ஆனால் விசாரணைக்காகவோ, வேறு தேவைகளுக்காகவோ கேபியை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம்.

இப்பொழுது கே.பி. உளவுப் படையினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார். இன்று வரை அவர் வெளியிட்டுள்ள தகவல்கள் மூலம் புலிகள் இயக்கத்தின் பல்வேறு நடவடிக்கைகளை அறிந்து கொள்ள முடிந்துள்ளது.

சர்வதேச அளவில் போதைப்பொருள் விற்பனை, ஆயுத விற்பனை, நாணய மாற்று போன்றவை மூலம் பல கோடிக்கணக்கான நிதியை சம்பாதித்திருக்கிறார். அத்துடன் பல நிறுவனங்களின் உரிமையாளராகவும் இருந்து வந்திருக்கிறார்.

இப்பொழுது கிடைத்து வரும் தகவல்கள் மூலமாக உள்ளூரிலும் வெளியூரிலும் புலிகளுக்காகப் பேசியவர்களும், தொடர்புடையவர்களும் யார் யார் என்ற விவரங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

பல அரசு சார்பற்ற தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளும் இதில் அடக்கம். இவர்கள் சர்வதேச அளவில் பிரபலமானவர்கள்.

கேபியைக் காட்டிக் கொடுத்தனர்...

கேபி. ஏழு வருடங்களாக இலங்கை அரசால் தேடப்பட்டு வந்தவராவார். இலங்கை உளவுப் பிரிவின் திறமையை இப்பொழுதுதான் உலகம் புரிந்துகொண்டுள்ளது. ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்க முற்பட்டவர்களே கேபியையும் காட்டிக்கொடுத்தனர்.

30 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்த பிரபாகரனின் புலிகள் அமைப்பு இதன் பின்னர் எவ்வகையிலும் தலைதூக்க இயலாது. இவரது நிழலில் நடமாடுகின்ற எவராலும் இந்நாட்டில் மீண்டும் தலைதூக்க இயலாது.

இதனைக் கருத்திற்கொண்டோ தெரியவில்லை ஆசியாவில் ஒரு இஸ்ரேல் என இலங்கையை ஒரு பத்திரிகை வர்ணித்துள்ளது.

ருத்ரகுமாரனையும் பிடிப்போம்...

விடுதலைப்புலிகள் அமைப்பில் மீதமுள்ள சட்ட ஆலோசகர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் மற்றும் தவா இளையதம்பி ஆகியோரையும் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

செல்வராசா பத்மநாதன் வழங்கிய தகவல்கள் அடிப்படையில், அமெரிக்காவில் வாழும் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் மற்றும் கனடாவில் வாழும் தவா இளையதம்பி ஆகியோரை சிக்க வைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன.

இந்த இருவரையும் விரைவில் சிக்க வைத்து கைது செய்வதன் மூலமாக விடுதலைப்புலிகள் சர்வதேச அளவில் வீழ்ச்சியை சந்திப்பார்கள்.

பத்மநாதன் வழங்கிய தகவல்களின்படி ருத்திரகுமாரன் அமெரிக்காவில் இருப்பதுடன் மற்றுமொரு தலைவரான தவா இளையதம்பி கனடாவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் என்றார் அவர்.

கேபியை சந்தித்தேன் - கோத்தபயா

இதற்கிடையே, கேபியை நேரில் சந்தித்து பல விவரங்களை அறிந்து கொண்டதாக கோத்தபயா ராஜபக்சே கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் 30 ஆயிரம் பேர் பயிற்சி பெற்றிருந்தனர். கடத்தல்கள், போதைப்பொருள் வியாபாரம் மற்றும் நிதி சேகரிப்பு உள்ளிட்ட புலிகளின் நடவடிக்கை தொடர்பான தகவல்களை கேபி.யிடம் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து திரட்டிக்கொள்ள முடிந்துள்ளது.

பயங்கரவாதத்துக்கு அப்பால் ஏனைய குழுக்களுடனும், சர்வதேச உள்ளூர் அமைப்புகளுடனும் புலிகள் கொண்டிருந்த தொடர்புகள் குறித்த தகவல்களும் கிடைத்துள்ளன என்றார்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதி அதிபர் தேர்தலில் போட்டி..

இதற்கிடையே, இலங்கை சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி சரத் சில்வா அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.

பதவியிலிருந்து ஓய்வு பெறுவற்கு சில நாட்களுக்கு முன்பு இவர் வன்னி முகாமைப் பார்வையிட்டார். தமிழர்களின் நிலையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்த அவர், இலங்கையின் சட்டத்தில் இவர்களுக்கு நீதி கிடைக்காது என்றும் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

தற்போது ராஜபக்சேவுக்கு எதிராக இவரை பொது வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன.

இதுதொடர்பாக விருந்து நிகழ்ச்சி ஒன்றுக்கும் இவை ஏற்பாடு செய்துள்ளன. இக்கூட்டத்திற்கு வருமாறு, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கை சுதந்திரக் கட்சி (மக்கள் பிரிவு) தலைவர் மங்கள சமரவீர மற்றும் முன்னணி சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இக்கூட்டத்தில் சில்வாவை அதிபர் தேர்தல் பொது வேட்பாளராக நிறுத்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய நடவடிக்கையால் ராஜபக்சே தரப்பு சற்று கலக்கமடைந்திருப்பதாக கருதப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+