பாளை சிறையில் எஸ்.ஏ ராஜா அடைப்பு
நெல்லை: ஆலடி அருணா கொலை வழக்கி்ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட எஸ்ஏ ராஜா பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் எஸ்ஏ ராஜா, வேல்துரை, ஆறுமுகம் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மதுரை உயர் நீதிமன்ற கிளை கடந்த 5ம் தேதி தீர்ப்பு கூறியது.
இவ்வழக்கில் நெல்லை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பாலா, அழகர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 8ம் தேதி எஸ்ஏ ராஜா இலங்கை செல்ல முயன்றபோது திருச்சி விமான நிலையத்தில் போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் திருச்சி அடுத்த மணிகண்டத்தில் உள்ள அவருக்கு சொந்தமான பல் மருத்துவ கல்லூரி அழைத்து சென்று தங்க வைத்தனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையிலிருந்து ஆலடி அருணா தீர்ப்புரை அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் எஸ்ஏ ராஜா, வேல்துரை, ஆறுமுகம், ஆகியோரை கைது செய்ய மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி விஜயராகவன் பிடிவாரண்ட் பிறபித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து எஸ்ஏ ராஜாவை கைது செய்ய ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் பாண்டி, தாழையூத்து இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் திருச்சி சென்றனர். திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்து சிறையிலுள்ள அவரை நேற்று காலை திருச்சி சிறையிலிருந்து அழைத்து வந்தனர்.
பின்னர் அவர் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications