கோவையில் ஒரே பள்ளியில் 15 மாணவிகளுக்கு பன்றிக் காய்ச்சல்
கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை 80க்கும் மேற்பட்டவர்களிடம் ரத்த மாதிரி எடுத்து சென்னை கிண்டி கிங் நிறுவனத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இதில் 2 தினங்களுக்கு முன் வந்த பரிசோதனை முடிவில் தடாகம் சாலையில் உள்ள தனியார் பள்ளி மாணவிகள் 8 பேர் உட்பட 15 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் கிடைத்த முடிவில் அதே பள்ளி மாணவிகள் 7 பேர் உட்பட 16 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நோய் பாதித்த 15 மாணவிகளும் 10 முதல் 11 வயதுள்ளவர்கள். ஒரே வகுப்பு மற்றும் பக்கத்து வகுப்பு மாணவிகளுக்கு நோய் பரவியிருப்பது தெரியவந்துள்ளது.
அனைவருக்கும் டாமிப்ளூ மாத்திரை கொடுத்து அவரவர் வீட்டிலேயே தங்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தவிர இதே பள்ளி மாணவிகள் உட்பட 3 பேரின் ரத்த பரிசோதனை முடிவு விரைவில் தெரியவரும். அப்போது நோய் பாதித்த மாணவிகளின் எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உமாநாத் கூறுகையில், கோவையில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவும் பள்ளிகளில் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் என்றார்.
வேலூர் பெண்ணும் பாதிப்பு..
இதற்கிடையே, வேலூரைச் சேர்ந்த 32 வயது பெண்ணுக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிஎம்சி மருத்துவமனையில் நடந்த ரத்தம் மற்றும் சளி பரிசோதனையில் நோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலைக்கும் பரவியது...
இந் நிலையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு சிறுவனுக்கும் இந்த நோய் அறிகுறி இருப்பதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.