ஏர் இந்தியா - ஊழியர் யூனியன் பேச்சு தோல்வி!
மும்பை: ஏர் இந்தியா நிர்வாகத்தின் 14 ஊழியர் சங்கங்கள் கடந்த இரு தினங்களாக மேற்கொண்ட நீண்ட பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
நிர்வாகம் - ஊழியர்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து, பணியாளர் குறைப்பு, விமானங்கள் குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாக ஏர் இந்தியா நிர்வாகம் எச்சரித்துள்ளது.
சம்பளக் குறைப்பு மற்றும் தாமதமாக தரப்படுவதைக் கண்டித்து ஏர் இந்தியா ஊழியர் நேற்று முன்தினம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அதேநேரத்தில் ஏசிஇயு உட்பட அந்நிறுவன ஊழியர் சங்கங்களுடன் நிர்வாகம் பேச்சு நடத்தியது. நீண்ட நேரம் நீடித்த பேச்சில் முடிவு ஏற்படவில்லை.
ஏர் இந்தியா நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து மீட்க, பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.
1,400 கோடி ரூபாய் வரை Flying allowance வழங்கி வருகிறது ஏர் இந்தியா. நிறுவனத்தின் நஷ்டத்தைக் குறைக்க, அதை 700 கோடி ரூபாயாகக் குறைக்க திட்டமிட்டது. இதற்கு எதிர்ப்பு எழுந்ததால் பணியாளர்கள் சங்கங்களுடன் பேச்சு நடத்தப்பட்டது.
அதே நேரம் சம்பளத்தை சரியான தேதியில் கொடுக்க நிர்வாகம் ஒப்புக் கொண்டது. ஆனால் பிளையிங் அலவன்ஸ் விஷயத்தில் எந்த முடிவும் எட்டப்படாமலேயே முறிந்தது பேச்சுவார்த்தை.
இதைத் தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனத்தைக் காக்க சம்பளக் குறைப்பு, ஆள் குறைப்பு மற்றும் விமானங்கள் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை யோசித்து வருவதாக ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் ஜிதேந்திரா தெரிவித்துள்ளார்.
யூனியன்கள் தரப்பில் இன்னும் நம்பிக்கையுடன் காத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
"ஏர் இந்தியா நிர்வாகத்தினருடனான பேச்சு நேற்று முன்தினம் மதியம் தொடங்கி நேற்று காலை வரை நீடித்தது. ஆனால், அதில், எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
பணியாளர்களின் சம்பளம் குறைப்பதைத் தவிர்த்து, கம்பெனியை நஷ்டத்தில் இருந்து காக்க, வேறு மாற்று வழிகள் உள்ளன. மற்ற வீணான செலவினங்களைக் குறைப்பது பற்றி விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இதுகுறித்து சாதகமான முடிவை மேற்கொள்வதாக ஏர் இந்தியா சேர்மன் தெரிவித்துள்ளார்..." என்று ஏர் கார்ப்பரேஷன் தொழிலாளர் யூனியன் தலைவர் தினகர் ஷெட்டி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications