சென்னை 11ம் வகுப்பு மாணவருக்கு பன்றி காய்ச்சல்
சென்னை: சென்னையில் 11ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சோலையூர் காமராஜபுரம் மசூதி காலனியில் வசித்து வருபவர் அப்துல்லா. இவரது மகன் முகமது பிலால் (16), கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு கடந்த நான்கு நாட்களாக கடும் காய்ச்சல் இருந்தது. மேலும் தொண்டை வலியும் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு கிண்டி கிங் பரிசோதனை மையத்தில் சோதனை மேற் கொள்ளப்பட்டது.
சோதனை முடிவில் அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் தண்டையார் பேட்டை தொற்றுநோய் தடுப்பு மருத்தவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் பள்ளிகளில் இன்று பரிசோதனை...
இது குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் வனஜா கூறுகையில்,
தண்டையார்பேட்டை மருத்துவமனையில் 4 பேர் பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் சேர்ந்துள்ளனர். முன்னதாக அங்கு 68 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 25 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர். மீதம் 43 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பன்றி காய்ச்சல் குறித்து யாரும் பயப்பட தேவையில்லை. நோய் வந்த பின்னர் முறையாக சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்.
தற்போது தமிழக அரசின் உத்தரவுபடி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பன்றி காயச்சல் அறிகுறி ஏற்பட்டால், அவர்களுக்கு உடனடியாக நடாமாடும் மருத்துவ ஆய்வுக்கூடம் மூலம் பரிசோதனை செய்யப்படும். இந்த பரிசோதனை காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளில் இன்று நடைபெற உள்ளது என்றார்.
புதுச்சேரியில் மேலும் 3 பேருக்கு பன்றிக் காய்ச்சல்
இதற்கிடையே, புதுச்சேரியில் மேலும் மூன்று பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் 3 பேர் வந்தனர். அவர்களின் ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் அவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதியானது.
மூவரில் ஒருவர் 10 வயதான சிறுமி ஆவார். இன்னொருவர் மாணவர். மூவரும் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் இவர்களையும் சேர்த்து இதுவரை 17 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.