சங்கிலி பறிப்பு - மாஜி சிபிஐ அதிகாரி கைது
நாகர்கோவில்: நாகர்கோவிலில் பெண் உள்பட 2 பேரிடம் சங்கிலி பறித்த வழக்கில் முன்னாள் சிபிஐ அதிகாரியை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 2 தங்க சங்கிலி, மற்றும் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது.
நாகர்கோவிலில் பராமர்த்த லிங்கபுரத்தை சேர்ந்தவர் பேபி. இவர் சம்பவத்தன்று வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து அவர் கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் சங்கிலியை பறித்து கொண்டு ஓடிவிட்டார்.
இதுபற்றி நாகர்கோவில் மத்திய குற்றப்பிரிவு போலீசில் பேபி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி செய்து வி்ட்டு தப்பியோடியவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் வடசேரி சைக்கிள் ஸ்டாண்ட் அருகே சந்தேகப்படும்படி ஒருவர் நின்றுக் கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்த போது அவரது பெயர் ஜார்ஜ். நாகர்கோவில் செட்டிகுளத்தை சேர்ந்தவர் என்றும், 2 வழிப்பறிகளையும் அவரே செய்ததாகவும் தெரிய வந்தது.
அதை தொடர்ந்து ஜார்ஜை போலீசார் கைது செய்து விசாரி்த்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
ஜார்ஜ் எல்லை பாதுகாப்பு படையில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தார். அவரை தற்காலிக பணியாக சென்னை வடபழனியில் சிபிஐ அலுவலகத்திற்கு சப்-இன்ஸ்பெக்டராக மாற்றினார்கள். அங்கு ஜார்ஜ் 2 ஆண்டு பணி புரிந்துள்ளார்.
பின்னர் தானாகவே முன்வந்து ஓய்வு பெற்றார். ஜார்ஜ் ஆடம்பர செலவை குறைக்க முடியாமல் வழிப்பறியில் ஈடுபட்டதாகவும் சென்னையி்ல் மட்டும் அவர் மீது 10 வழக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அந்த வழக்குகளில் வக்கீல் வைத்து வாதாட பணம் தேவைப்பட்டதால் நாகர்கோவிலில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் 2 தங்க சங்கிலி உள்ளிட்டவற்றைப் பறிக்க பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் மீட்டனர்.