நெல்லை-சாலையில் சிதறிய மதுபாட்டில்கள்
நெல்லை: நெல்லையில் மதுபாட்டில்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் சுமார் ரூ. 12 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் உடைந்து நாசமாயின.
கோயம்புத்தூரில் இருந்து நேற்று இரவு கன்னியாகுமரி மாவட்ட அரசு மதுபான கிடங்கிற்கு ரூ.12 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று கிளம்பியது.
அதை டிரைவர் அன்சாரி என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் கிளீனர் ராஜூ என்பவரும் வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை நெல்லை பொறியியல் கல்லூரிக்கு எதிரே லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பக்கமாக அசுர வேகத்தில் லாரி ஒன்று மதுபாட்டில் லாரி மீது மோதுவது போல் வந்துள்ளது.
இதையடுத்து டிரைவர் அன்சாரி லாரியை இடதுபக்கமாக திருப்பினார். அப்போது லாரி எதிர்பாராத விதமாக ஒரு பக்கமாக சரிந்து விழுந்தது. இதையடு்தது லாரியில் இருந்து மதுபாட்டில்கள் நடுரோட்டில் விழுந்து சிதறியது.
காலை நேரத்தில் இந்த விபத்த நடந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து லேசாக பாதிக்கப்பட்டது. அந்த பக்கமாக சென்றவர்கள் மது வாடை தாங்க முடியாமல் மூக்கை பிடித்து கொண்டு சென்றனர்.
இந்த விபத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பாட்டில்கள் முற்றிலும் சேதமாகின. மற்ற பாட்டில்கள் லேசான சேதமடைந்ததாக கூறப்படுகிறது.