சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட 27 கிலோ மயில் இறகுகள்!
மலேசியா செல்லும் பயணியின் உடமைகளுடன் இந்த மயில் இறகுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. சுங்கத் துறை சட்டப்படி மயில் இறகுகளை ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.
ராமநாதபுரம் மாவட்டம் பாசிப்பட்டனம் பகுதியைச் சேர்ந்தநர் நூஹு முகம்மது. இவர் விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து அவரை சுங்கத்துறை அதிகாரிகள் தனியாக கூட்டிச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார்.
இதையடுத்து அவரது உடமைகளை அதிகாரிகள் சோதித்தனர். அப்போது செயற்கைப் பூக்களுக்குக் கீழே ஒரு துணியில் சுற்றி வைக்கப்பட்டிருந்த மயில் இறகுகள் இருந்தது தெரிய வந்தது.
முதலில் ஒரு செய்தித் தாளில் வைத்து அந்த மயில் இறகுகள் சுற்றப்பட்டிருந்தன. பின்னர் ஒரு துணியில் வைத்து சுற்றியுள்ளனர். அதன் பிறகு அவற்றை பெட்டிக்குள் வைத்து அதன் மேலே செயற்கை மலர்களை வைத்து பூக்கள் கொண்டு செல்வது போல செட்டப் செய்துள்ளனர்.
மலேசியாவுக்கு இவற்றை கடத்திச் செல்ல திட்டமிட்டிருந்தார் முகம்மது. இதையடுத்து முகம்மது கைது செய்யப்பட்டார்.
விசாரணையின்போது அவர் பல்வேறு வெளிநாடுகளுக்குச் செல்வது வழக்கம் என்று தெரிய வந்தது. மேலும், இதேபோல முன்பும் கூட மயில் இறகுகளை வெளிநாடுகளுக்கு அவர் கடத்திக் கொண்டு சென்றுள்ளார்.
தேசியப் பறவையான மயில், தமிழகத்தில் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருவதாக ஏற்கனவே புகார்கள் உள்ளன. எண்ணெய்க்காகவும், கறிக்காகவும் மயில்களைக் கொல்கிறார்கள். இந்த நிலையில், அவற்றின் இறகுகளை வெளிநாடுகளுக்குக் கடத்திச் செல்லும் சம்பவங்கள் நடைபெறுவது தற்போது அம்பலமாகியுள்ளது.
குஜராத், ராஜஸ்தானுக்குப் பின்னர் தமிழகத்தில்தான் மயில்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் ஏராளமான மயிலகள் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக மதுரை, தேனி, விருதுநகர், கோவை மாவட்டங்களில் மயில்களைக் காணலாம்.