Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆயுத பூஜை, விஜயதசமி - ஜெ. உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி...

நவராத்திரி விழாவும், விஜயதசமி திருநாளும் நாடு முழுவதும் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது. துன்பத்தைப் போக்கும் துர்கா தேவியை மூன்று நாட்களும், பொருளாதார நெருக்கடியை தீர்க்கும் லட்சுமி தேவியை மூன்று நாட்களும், அறிவுச் செல்வத்தை தரக்கூடிய சரஸ்வதி தேவியை மூன்று நாட்களும் நாம் நவராத்திரி நாட்களில் வழிபடுகிறோம்.

உயிர்ப் பொருட்கள், உயிரற்ற பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறை பொருளாக பாவித்து வணங்குவதே ஆயுத பூஜை!

மகிஷாசுரன் என்னும் கொடிய அரக்கனை அன்னை பராசக்தி அழித்து வெற்றி வாகை சூடிய நாள் விஜயதசமி திருநாளாக அனைவராலும் கொண்டாடப் படுகிறது.

இறைவன் அருளால் எண்ணும் எண்ணங்கள், துவங்கும் நற் காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகி அனைவரது வாழ்விலும் அனைத்துச் செல்வங்களும் தழைத்தோங்க வேண்டும். தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த விஜயதசமி நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் தங்கபாலு..

தங்கபாலு விடுத்துள்ள செய்தியில்,

கலை அம்சங்களோடு, கற்பனை வளத்தையும் சேர்த்து உருவாக்கும் கைவினைஞர்களின் கொலு என்ற கண்கவர் நிகழ்ச்சிகளை வீடுதோறும் அமைத்து, அதன்மூலம் கல்வி, ஒழுக்கம், பண்பாடு ஆகிய நன்னெறிகளை மனிதர்களுக்கு போதிக்கும் விழா நவராத்திரி என்ற விஜயதசமியாகும்.

இந்நன்னாளில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் அமைதி, சமாதானம் உருவாகி நல்லிணக்கம் மேம்பட்டு வாழ்வில் மகிழ்ச்சி பொங்கிட தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் இல.கணேசன்

இல.கணேசன் விடுத்துள்ள செய்தியில்,

மகிஷன் போன்ற அசுரர்கள் மிகவும் பலம் பொருந்திய நிலையில் அவர்களை தேவர்களால் ஒடுக்க முடியாத நிலையில் அத்தனை தெய்வங்களும் தங்கள், தங்களது சக்தியை வெளிப்படுத்தி உருவாக்கிய மகா சக்திதான் துர்க்கை.

அதன் காரணமாகவே ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுதம் இருந்தாலும் அத்தனை ஆயுதங்களையும் கையிலேந்தி நிற்கின்ற சக்தி வாய்ந்த வடிவமாக துர்க்கை காட்சி தருகிறாள்.

அசுர சக்திகளை வென்று வாகை சூடிய நாள் விஜயதசமி. இன்றைய சூழ்நிலையிலும் கூட தேச விரோத சக்திகள் மற்றும் பண்பாட்டுக்கு விரோதமான சக்திகள் பலம் பொருந்தியதாக தோற்றம் அளிக்கின்றன.

அதுகண்டு நிராசை அடையாமல் நல்லவர்கள் தங்களது சக்தியை ஒருங்கிணைத்து ஒன்றுபட்டு போராடினால் இந்தக் காலத்திலும் வெற்றி பெற முடியும் என்பதே விஜயதசமி நன்னாள் நமக்கு உணர்த்துகின்ற பாடம் என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+