கோவை மில்லிருந்து 22 பீகார் தொழிலாளர்கள் விடுவிப்பு-8 பேர் கைது
கோவை: கோயம்புத்தூர் தனியார் மில்லில் அடைக்கப்பட்டிருந்த 22 பீகார் தொழிலாளர்கள் போலீஸார் விடுவித்தனர். மேலும், இவர்களை அடைத்து வைத்திருந்த மில் நிர்வாகத்தின் சார்பில் அமர்த்தப்பட்டிருந்த 8 பேரை கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீராம் கோகுல் டெக்ஸ்டைல்ஸ் என்ற நிறுவனத்தில் பீகாரை சேர்ந்த 22 தொழிலாளிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் நிதிஷ் குமாரிடம் அவர்களது உறவினர்கள் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து அவர் அம்மாநில முதன்மை செயலாளர் அமிர் சுபானியிடம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கூறினார். அவர் தமிழக முதன்மை செயலாளரை சந்தித்து பேசினார்.
இதையடுத்து தமிழக போலீஸார் அந்த மில்லில் அதிரடி சோதனை நடத்தினர். அவர்கள் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த 22 பிகார் தொழிலாளர்களை விடுவித்தனர். மேலும், அடைத்து வைக்கப்பட்டிருந்த தொழிலாளர்கள் தப்பி விடாமல் பார்த்துக் கொண்டிருந்த மில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த 8 குண்டர்களையும் கைது செய்தனர்.
மீட்கப்பட்ட 22 பேரும் ரயில் மூலமாக பாட்னாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து அவர்களை தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.